மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஜனவரி 2ஆம் வாரத்தில் நடக்கவுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணி வீரர்கள் விளையாடும் கடைசி டி20 தொடர் இதுதான். இதனால் இந்த டி20 தொடர் இந்திய வீரர்களுக்கு மிக முக்கிய தொடராக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இதனால் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முயற்சிக்கும் இந்திய அணி வீரர்கள், ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் இடம்பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் இந்திய அணியின் கேப்டன்சி யாருக்கு என்பதில் தான் பிசிசிஐ குழம்பி வருகிறது. ஏனென்றால் இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை தொடரின் போது காயத்தில் சிக்கினார்.
அதன்பின் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்து ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென ஹர்திக் பாண்டியாவின் காயம் குணமடைய தாமதம் ஏற்படும் என்றும், அவர் நேரடியாக ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
அதேபோல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சூர்யகுமார் யாதவ் தென்னாப்பிரிக்கா டி20 தொடரின் கடைசி போட்டியின் போது காயத்தில் சிக்கினார். இவர் என்சிஏவில் சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கும் சூழலில், மீண்டும் களத்திற்கு திரும்ப பிப்ரவரி மாதமாகும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கு யார் கேப்டனாக செயல்படுவார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கேப்டனுக்கான ரேஸில் ஸ்ரேயாஸ் ஐயர் முன்னிலையில் உள்ளார். இந்திய அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியா டி20 தொடரின் போதே துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு வருவதால், மும்பையை சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்சி வழங்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.