பார்படோஸ்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2024 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியின் போது இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இந்தியாவின் முதல் அதிவேக பந்துவீச்சாளரான டேவிட் ஜான்சன் இன்று மறைந்தார். அதன் காரணமாகவே இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
டேவிட் ஜான்சன் கர்நாடகாவை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆவார். 1990களில் கர்நாடகா அணியில் இந்தியாவின் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருந்தனர். அப்போது கர்நாடகா அணியில் ஜவஹல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் தோடா கணேஷ் ஆகியோருக்கு அடுத்து டேவிட் ஜான்சனும் மிகச் சிறப்பாக வேகப்பந்து வீசி வந்தார்.

1996 ஆம் ஆண்டு அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். மொத்தமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அதில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். அது மட்டும் இன்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியின் போது அவர் 157.8 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார்.
அதன்படி பார்த்தால் இந்தியாவின் முதல் அதிவேக பந்துவீச்சாளர் அவர்தான். எனினும், அந்த காலகட்டத்தில் அதிக தொழில்நுட்பம் மற்றும் சமூக வலை தளங்கள் இல்லாததால் அவரது திறமை வெளி உலகத்திற்கு தெரியாமலே போய்விட்டது. அவர் கர்நாடக அணிக்காக ஆடிய போது அதே அணியில் இடம் பெற்றிருந்த ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோருடன் நட்புடன் இருந்துள்ளார்.
அவரது 52 வயதில் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து இருக்கிறார். அவரது மறைவை அடுத்து அவரது நண்பரும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுமான அனில் கும்ப்ளே தனது சோகத்தை சமூக வலை தளத்தில் வெளிப்படுத்தி இருந்தார். "நீ விரைவாக சென்று விட்டாய் பென்னி" என அவரது செல்லப் பெயரை வைத்து உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார் அனில் கும்ப்ளே.
டேவிட் ஜான்சன் மறைவுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் இரங்கல் தெரிவித்து இருந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பிசிசிஐ-யின் அறிவுறுத்தலின்படி இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 13 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரிஷப் பண்ட் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் சேர்த்து இருந்தது.