பார்படாஸ் : இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை நம்பர் 3ல் களமிறக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் அட்வைஸ் கொடுத்துள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். விராட் கோலி ரன்கள் சேர்க்க முடியாமல் தடுமாறுவதால், அவரை நம்பர் 3ல் களமிறக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி நாளை ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதற்காக பார்படாஸ் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில் நடந்த லீக் போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கினார்.

3 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 1, 4, 0 என்று மொத்தமாக 5 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மீது சந்தேகங்கள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் நம்பர் 3ல் நன்றாக விளையாடி வந்த விராட் கோலியை எதற்காக தொடக்க வீரராக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இந்த நிலையில் விராட் கோலியின் நெருங்கிய நண்பர் டி வில்லியர்ஸ் பேசுகையில், எப்போதும் விராட் கோலியை நம்பர் 3ல் களமிறங்கி விளையாடுமாறு கெஞ்சி இருக்கிறேன். குறிப்பாக நாளை விளையாடப் போகும் பிட்ச்களில், விராட் கோலி போன்ற வீரர் தான் நம்பர் 3ல் களமிறங்க வேண்டும். ஏனென்றால் பேட்டிங்கிற்கு உதவியாக இருந்தால் அட்டாக்கிங் கிரிக்கெட்டையும், ஒரு வேளை விக்கெட்டுகளை பறிகொடுத்தால் பிரஷருடன் ரன்களையும் சேர்க்க முடியும்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் விளையாடக் கூடிய சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான். அவர் தொடக்க வீரராக களமிறங்குவதற்கான காரணமும் இதுவரை புரியவில்லை. நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைவதற்கு அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடாததே காரணம் என்று நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் எப்போதும் முதல் அடியை அடிக்க தயங்க கூடாது.
இந்திய அணி சிறிய தயக்கத்துடன் கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்தது. இந்திய அணியின் தரம் குறித்து யாருக்கும் சந்தேகம் கிடையாது. ஆனால் ஆட்டத்தில் முன் நகர வேண்டும் என்றால் தொடக்கத்திலேயே ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும். அப்படி ரிஸ்க் எடுத்து முன்னேறிவிட்டால், இந்திய அணியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.