2 தொடருக்கு ஒரு முறை காயமடையும் வாசிங்டன் சுந்தரை எதுக்கு சேர்க்குறீங்க? ஸ்ரீகாந்த் காட்டம்
மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமை தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், போட்டிகளில் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபிக்காத நிலையில் அவரைத் தேர்வு செய்தது தேவையற்றது என்று ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.சமீபகாலமாக இந்திய வீரர்கள் அடிக்கடி காயமடைவது பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. முக்கிய வீரர்கள் தொடர்ந்து காயங்களால் போட்டிகளைத் தவறவிடுவது இந்திய அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படக்கூடியவர் தான், ஆனால் அவர் இலங்கை தொடரில் விளையாடவில்லை. இப்போது இரண்டு வாரங்களில் அவர் எப்படி தகுதியடைந்தார்? அவர் தனது போட்டி உடற்தகுதியை இன்னும் நிரூபிக்கவில்லை. இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு ஏதேனும் ஒரு மட்டத்திலான போட்டிகளில் விளையாடி உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவரைத் தேர்வு செய்ததில் என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"வெறும் மருத்துவரின் சான்றிதழை மட்டும் வைத்துக் கொண்டு விளையாட வர முடியாது. வாஷிங்டன் சுந்தர் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று தொடர்களுக்குப் பிறகு காயமடைவது போல் தெரிகிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அவரது பந்துவீச்சை எதிரணி வீரர்கள் சிதறடித்தனர். அவர் டி20 போட்டியில் தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சிறப்பாக மாறினார், ஆனால் தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தனது Rhythm-ஐ இழந்துவிட்டார்" என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
"நிதிஷ் குமார் ரெட்டி தனது போட்டி உடற்தகுதியை நிரூபித்தால், சிவம் துபேவை விட நான் அவருக்கே முன்னுரிமை அளிப்பேன். ஆனால், இப்போது ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன்னதாக அவர் விளையாடி நிரூபிக்க போதிய நேரம் இல்லை. இந்தத் தொடருக்கு முன்பு அவர் என்ன போட்டியில் விளையாட முடியும்?" என்று ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications
