பார்படாஸ் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் பயிற்சியில் அதிக நேரம் பவுலிங் செய்த குல்தீப் யாதவை ராகுல் டிராவிட் நீண்ட நேரம் கண்காணித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்கவுள்ளது. இதில் நாளை நடக்கும் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தையும் இந்திய அணி அமெரிக்காவில் விளையாடிய சூழலில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகளுக்காக வெஸ்ட் இண்டீஸில் முகாமிட்டுள்ளது.

பார்படாஸ் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்த டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கி எதிரணிகளை வீழ்த்தி வருகிறது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுவதால், இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4 ஆல்ரவுண்டர்களுடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவோம் என்று கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் இருப்பதால், இந்திய அணியின் பேட்டிங் வரிசை நம்பர் 8 வரை உள்ளது. இந்த நிலையில் பார்படாஸ் மைதானத்தில் நடந்த வலைப்பயிற்சியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் குல்தீப் யாதவ் பவுலிங் செய்துள்ளார்.
வழக்கத்திற்காக மாறாக இருவருக்கும் கூடுதல் நேரம் குல்தீப் யாதவ் வீசிய போது, அதனை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நின்று கவனித்துள்ளார். நெட்ஸிலேயே நல்ல ஸ்பின்னான நிலையில், போட்டியிலும் ஓரளவிற்கு ஸ்பின் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் முகமது சிராஜ் அல்லது அர்ஷ்தீப் சிங் இருவரில் ஒருவர் பெஞ்ச் செய்யப்பட வாய்ப்புள்ளது.
3 வடிவங்களிலும் குல்தீப் யாதவின் பவுலிங் சிறப்பாக இருந்தாலும், லீக் போட்டிகளில் ஒன்றில் கூட குல்தீப் யாதவ் சேர்க்கப்படவில்லை. பார்படாஸ் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றாலும், வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படி ஸ்பின்னர்களை வைத்து வென்றதோ, அதே ஃபார்முலாவை இந்திய அணி பின் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.