மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் அதிகம் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த நிலையில் முகமது சமியை பாராட்டி இன்று அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. முகமது சமி தற்போது காயம் காரணமாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. காயத்திலிருந்து மீண்டு வரும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் முகமது சமி டி20 உலககோப்பை தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன முகமது சமி, பிசிசிஐயை மறைமுகமாக விமர்சித்து கருத்து தெரிவித்தார். இது குறித்துப் பேசிய அவர் டி20 கிரிக்கெட் பொறுத்த வரை நான் பரிசீலினையில் இருக்கிறானா இல்லையா என்பது குறித்து தெளிவாக என்னிடம் யாரும் ஏதும் சொல்வதில்லை.
என்னைப் பொறுத்தவரை நான் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். இதற்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஒரு நல்ல பார்மில் இருக்க முயற்சி செய்வேன். இந்திய அணி நிர்வாகம் என்னை டி20 உலக கோப்பையில் விளையாட கூறினால் நிச்சயம் அந்த தொடரில் விளையாடுவேன் என்று முகமது சமி கூறியுள்ளார்.
தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய டி20 அணி,ஆர்ஸ்தீப் சிங்,அவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் என மூன்று வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சிராஜ் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த டி20 உலக கோப்பையில் முகமது சமி 6 போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இதுவரை 23 டி20 கிரிக்கெட் போட்டிகள் விளையாடி 24 விக்கெட்டுகளை முகமது சமி வீழ்த்தி இருக்கிறார். 2023 ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் முகமது சமி விளையாடி 28 விக்கெட்களை கைப்பற்றி பர்பிள் தொப்பியையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது