பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று பிரிவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடி வரும் நிலையில், கேப்டன் ரோகித் சர்மா ஒரு சோகமான சாதனையை பூர்த்தி செய்து இருக்கிறார். ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.
ஒரே உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் கேப்டனாக அதிக சிக்சர் அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகள் அவருக்கு சொந்தமாகும். இந்த சூழலில் ரோகித் சர்மாவுக்கு சோகமான சாதனையும் ஒன்று தற்போது அமைந்திருக்கிறது.

ரோகித் சர்மா அதிரடியாக விளையாட முற்பட்டு பல்வேறு சமயங்களில் வெற்றியை கண்டாலும் சில சமயம் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறார். நடப்பு உலக கோப்பை தொடரில் கூட கேப்டன் ரோஹித் சர்மா,அயர்லாந்துக்கு எதிராக அரை சதம் அடித்தாலும், பாகிஸ்தானுக்கு எதிராக 13 ரன்கள், அமெரிக்காவுக்கு எதிராக மூன்று ரன்கள் அடித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் ஐசிசி தொடர்களில் அதிக முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்த இந்திய வீரர் என்ற சோகமான சாதனை தற்போது ரோகித் சர்மாவுக்கு கிடைத்திருக்கிறது.
ரோகித் சர்மா ஐசிசி தொடர்களில் இதுவரை 19 முறை ஒற்றை இலக்கம் ரப்களில் ஆட்டம் இழந்திருக்கிறார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் யுவராஜ் சிங் இருக்கிறார். யுவராஜ் 17 முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார். விராட் கோலி 14 முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
தோனி 13 முறையும், சுரேஷ் ரெய்னா 13 முறையும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 12 முறையும், ஜாகிர் கான் 12 முறையும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்திருக்கிறார்கள். இதனால் ரோகித் சர்மாவை சில ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த கிண்டல்களுக்கு ரோஹித் சர்மா வரும் போட்டிகளில் பதில் அளி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.