IND vs AFG: ODI கிரிக்கெட் வரலாற்றிலேயே இல்லாத சாதனையை செய்த கேப்டன் சுப்மன் கில், இஷான் கிஷன்
லக்னோ: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அதிரடி சதம் விளாசிய சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத ஒரு மாபெரும் உலக சாதனையைப் படைத்து அசத்தியுள்ளனர்.
இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை கடந்த 1974 ஜூலை 13 அன்று விளையாடியது. அன்று முதல் கடந்த 52 ஆண்டுகளில் இந்தியா மொத்தம் 1077 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், ஒரே ஒருநாள் போட்டியில் 2 இந்திய பேட்ஸ்மேன்கள் 80 பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு சதம் அடிப்பது கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.

லக்னோவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இஷான் கிஷன் 71 பந்துகளிலேயே தனது சதத்தை நிறைவு செய்தார். ஒட்டுமொத்தமாக அவர் 79 பந்துகளில் 125 ரன்கள் (14 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்) விளாசினார். மறுபுறம், கேப்டன் சுப்மன் கில் 77 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். ஒட்டுமொத்தமாக கில் 110 பந்துகளில் 154 ரன்கள் (22 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) குவித்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு வெறும் 140 பந்துகளில் 224 ரன்கள் குவித்து அசுர வேகம் காட்டியது.
இவர்களின் அதிரடியால் இந்திய அணி 49.5 ஓவர்களில் 402 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 8வது முறையாக 400 ரன்களைக் கடந்த இந்தியா, அதிக முறை 400 ரன்களைக் கடந்த அணிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் உலக சாதனையை (8 முறை) சமன் செய்துள்ளது. மேலும், ஒருநாள் வரலாற்றில் 400 ரன்களுக்கு மேல் குவித்து 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆன முதல் அணி என்ற விசித்திரமான சாதனையையும் இந்தியா பெற்றுள்ளது.
பின்னர் 403 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை முன்கூட்டியே கைப்பற்றியது.


Click it and Unblock the Notifications
