பார்படாஸ் : இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கானின் பவுலிங் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் அதிரடி வீரர்களான ரிஷப் பண்ட், விராட் கோலி மற்றும் சிவம் துபே ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் ரஷீத் கான் வீழ்த்தி ரன் குவிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டது பாராட்டுகளை பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசி அசத்தினார்.

பேட்டிங்கிற்கு சிறியளவு சாதகமாக இருக்கும் பார்படாஸ் மைதானத்தில் இந்திய அணியால் எளிதாக 200 ரன்கள் சேர்க்க முடியும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கானின் பவுலிங் இந்திய அணிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. ரஷீத் கான் 4 ஓவர்களில் வெறும் 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 13 டாட் பால்களை வீசியதோடு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
பவர் பிளே ஓவர்களுக்கு பின் அட்டாக்கில் வந்த ரஷீத் கான் முதல் ஓவரிலேயே அதிரடி வீரர் ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் மீண்டும், 9வது ஓவரில் விராட் கோலியின் விக்கெட்டையும், 11வது ஓவரில் சிவம் துபே விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணியை பதற்றத்திற்கு தள்ளினார். சூர்யகுமாரின் விக்கெட்டை வீழ்த்த 14வது ஓவரை வீசுவதற்கு தாமதித்து வந்தார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஒரு ரன்னை எடுத்த சூர்யகுமார் யாதவ் எதிர்முனைக்கு சென்றார். அதன்பின் அடுத்த 5 பந்துகளையும் ஹர்திக் பாண்டியாவே எதிர்கொண்டு விக்கெட்டை காப்பாற்றி கொண்டார். இதனால் ரஷீத் கானின் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போனது. இல்லையென்றால் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டையும் ரஷீத் கான் வீழ்த்தியிருக்க வாய்ப்புகள் உள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் மற்ற பவுலர்கள் அனைவரின் எகனாமி ரேட்டும் 8 ரன்களுக்கு அதிகமாக உள்ளது. ஆனால் ரஷீத் கானின் எகனாமி ரேட் வெறும் 6.5 ரன்களாக மட்டுமே உள்ளது. கிட்டத்தட்ட வலிமையான இந்திய அணியின் பேட்டிங் லைன் அப்பிற்கு எதிராக ரஷீத் கான் ஒற்றை ஆளாக வாள் சுழற்றியதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.