பார்படாஸ் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் அடித்த அரைசதம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனிடையே இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் - ரஷித் கான் இடையில் நடந்த உரையாடல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி எளிதாக வென்றாலும், ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி இருவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆஃப்கான் கேப்டன் ரஷித் கான் வீழ்த்தி இருந்தார். இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் இருந்தது. இந்த நிலையில் களத்தில் சூர்யகுமார் யாதவ் - சிவம் துபே இருவரும் நின்று அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.

நூர் அஹ்மத் பந்தில் சிவம் துபே அபாரமாக ஒரு சிக்சரை விளாச, 11வது ஓவரை வீச ரஷித் கான் வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவ் தனது ஸ்டைலில் ஸ்வீப் ஷாட் மூலமாக அசத்தல் பவுண்டரி ஒன்றை விளாசினார். இதன்பின் 2வது பந்தை ரஷித் கான் கூக்ளியாக வீசியதால், ரன் எதுவும் சேர்க்கப்படவில்லை. பின்னர் 3வது பந்தை மீண்டும் கால் திசையில் பிட்ச் செய்தார்.
இதனை சரியாக கணித்த சூர்யகுமார் யாதவ், ஸ்வீப் ஷாட் மூலமாக டீப் ஸ்கொயர் லெக் திசையில் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வழக்கமாக ரஷித் கான் பவுலிங்கில் எந்த வீரர் ஸ்வீப் ஷாட் ஆடினாலும், உடனடியாக முகம் மாறிவிடும். மாற்று திட்டத்தை செயல்படுத்தி ரன்களை கட்டுப்படுத்துவார்.
ஆனால் நேற்றைய ஆட்டத்தின் போது சூர்யகுமார் யாதவிடம் ஸ்வீப் ஷாட் ஆட வேண்டாம் என்று சிரித்து கொண்டே சொல்லி இருக்கிறார். இந்த உரையாடல் சோசியல் மீடியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அடுத்த பந்திலேயே சிவம் துபே விக்கெட்டை வீழ்த்தி தனது பலத்தையும் ரஷித் கான் நிரூபித்துள்ளார்.
4 ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆஃப்கானிஸ்தான் அணியில் மற்ற வீரர்களின் எகனாமி ரேட் 8 ரன்களுக்கு மேல் சென்ற போதும், ரஷித் கானின் எகனாமி ரேட் 6.5ஆக மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.