பார்படாஸ் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்திய அணி வீரர்களில் சிறந்த ஃபீல்டருக்கான விருது யாருக்கு அளிக்கப்பட்டது என்று வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை தூக்கி கொண்டாடி உற்சாகத்தை வெளிப்படுத்தியது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி.திலீப் பொறுப்புக்கு வந்த பின்னர், ஒவ்வொரு தொடரிலும் சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் அளிக்கப்பட்டு வந்தது. அதேபோல் ஐசிசி போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் சிறந்த ஃபீல்டர் தேர்வு செய்யப்பட்டு பதக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. லீக் போட்டிகளின் போது ரிஷப் பண்ட், சிராஜ் உள்ளிட்டோர் பதக்கத்தை கைப்பற்றினர்.

அதுமட்டுமல்லாமல் பதக்கத்தை அளிப்பதற்காக இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஸ்பெஷல் விருதினர்களையும் அழைத்து வந்தார். அந்த வகையில் ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் இந்திய அணியின் ஓய்வறைக்கே நேரில் வந்து வீரர்களுடன் கலந்துரையாடி சென்றனர். இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முடிவடைந்த பின், சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் யாருக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிறந்த ஃபீல்டருக்கான போட்டியில் ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இருந்தனர். அக்சர் படேல் பெயரை சொல்லிய போது அவரே அதிர்ச்சியாக ரியாக்சன் கொடுக்க, அருகில் இருந்த விராட் கோலி சத்தமாக சிரிக்க தொடங்கினார். இதனால் இந்திய அணியின் ஓய்வறை அடுத்தக் கட்ட உற்சாகத்திற்கு சென்றது.
பின்னர் பதக்கத்தை அளிக்க சிறப்பு விருந்தினர் வருவதாக கூறி திலீப் கதவை திறக்க யாருமே வரவில்லை. இந்திய அணி வீரர்கள் அனைவரும் யார் என்று எதிர்பார்க்க, உடனடியாக நம்முடன் இருக்கும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் இன்று பதக்கத்தை அளிக்க போவதாக அறிவித்தார். அதன்பின் பதக்கத்தை கைகளில் வாங்கிய அவர், ஜடேஜாவுக்கு அணிவித்தார்.
தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இருந்து பதக்கத்தை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் ஜடேஜா, அவரை அப்படியே தூக்கி கொண்டாடினார். பிசிசிஐ சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.