பெங்களூரு: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கு பயிற்சி பெற்று வந்த இந்திய வீரர்களை ரிஷப் பண்ட் சந்தித்த சம்பவம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
2023 டிசம்பர் மாதத்தின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். அதன்பின் 14 மாதங்களுக்கும் மேலாக இந்திய அணியின் ரிஷப் பண்ட், மருத்துவ சிகிச்சை, ஓய்வு, பயிற்சி என்று சுழன்று வருகிறார். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ரிஷப் பண்ட் தோனி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து வந்தார்.

இதனிடையே என்சிஏ-வின் அறிவுறுத்தல் படியே ரிஷப் பண்ட் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக பிப்ரவரி கடைசி வாரத்திற்குள் அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைவார் என்று பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் நேரடியாக ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் களமிறங்க உள்ளதாக கூறப்படுகின்றன.
இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கவுள்ளது. இதற்காக பெங்களூரு சின்னசாமி மைதானம் வந்த இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தனர். அப்போது என்சிஏ-வில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரிஷப் பண்ட், இந்திய வீரர்களை சந்திக்க சின்னசாமி மைதானம் வந்துள்ளார்.
ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் உள்ளிட்டோரை சந்தித்த ரிஷப் பண்ட், அவர்களுடன் சில மணி நேரங்கள் உரையாடி சென்றுள்ளார். இதன்பின் ரிஷப் பண்ட் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. எந்த சிரமமுமின்றி அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப் பண்ட் காயத்திற்கு பின் இந்திய டெஸ்ட் அணிக்கு சரியான விக்கெட் கீப்பர் கிடைக்காமல் திண்டாடி வருகிறது. இங்கிலாந்து தொடருக்கு கூட கேஎல் ராகுல், கேஎஸ் பரத் மற்றும் துருவ் ஜுரெல் உள்ளிட்ட 3 பேரை தேர்வு செய்துள்ளதால், ரசிகர்கள் பலரும் ரிஷப் பண்ட் கம்பேக் எப்போது இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.