பார்படாஸ் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பங்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் சேர்த்தனர்.
இதன்பின் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பேட்டிங்கிற்கு உதவியாக இருந்த மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு அருகில் வந்து சவால் கூட அளிக்காதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

அயர்லாந்து அணிக்கு எதிராக அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அதன்பின் 3 இன்னிங்ஸ்களிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் சோசியல் மீடியாவில் ரோகித் சர்மாவை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் ரோகித் சர்மா 3 முறை ஆட்டமிழந்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பேட்டிங்கில் சொதப்பினாலும் கேப்டன்சியில் ரோகித் சர்மா கில்லியாக செயல்பட்டு வருகிறார். ஆஃப்கானிஸ்தான் போட்டியில் இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இதனால் பும்ராவை 2வது ஓவரிலேயே அட்டாக்கில் கொண்டு வந்து விக்கெட்டை வீழ்த்தினார். இதே பும்ராவை மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா 2வது ஓவரை வீச ஒருமுறை கூட அழைக்கவில்லை.
அதேபோல் யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்சர் படேலை பவர் பிளேவில் கொண்டு வந்ததாக இருக்கட்டும், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவை பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப பந்துவீச அழைத்தாத இருக்கட்டும், அனைத்து முடிவுகளும் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. அதேபோல் ரிஷப் பண்டை நம்பர் 3ல் இருந்து மாற்றாதது, வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் சூர்யகுமார் யாதவை நம்பர் 4ல் நிரந்தரமாக களமிறக்கி வருகிறார்.
அதேபோல் இடதுகை பேட்ஸ்மேன்களை அணியில் வைத்து தேவைக்கேற்ப ரோகித் சர்மா பயன்படுத்தி வருகிறார். ரிஷப் பண்ட், சிவம் துபே, அக்சர் படேல் ஆகியோருக்கு முழு சுதந்திரம் கொடுத்து ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் சேர்ப்பது அவர்களின் ஆட்டத்திலும் தெரிகிறது. இதனால் பேட்ஸ்மேனாக சொதப்பினாலும், கேப்டன்சியில் ரோகித் சர்மா மிரட்டி வருவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.