பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பார்படாஸ் பகுதியில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி லீக் ஆட்டம் அனைத்தையும் அமெரிக்காவில் விளையாடிய நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் இல் விளையாடுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் ஒவ்வொன்றும் இந்தியாவுக்கு மிகவும் பரிச்சயம் ஆகும். இதனால் ஆப்கானிஸ்தானை விட இந்திய வீரர்களுக்கு இங்கு விளையாடிய அனுபவம் இருக்கின்றது. எனினும் ஆப்கானிஸ்தானை குறைத்து மதிப்பிட முடியாது. பலம் வாய்ந்த நியூஸிலாந்து போன்ற அணியை எல்லாம் வீழ்த்தி அவர்கள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள்.

குறிப்பாக இரு அணிகளும் கடந்த ஜனவரி மாதம் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் மூன்றாவது டி20 போட்டி சமனில் முடிவடைந்து சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. அதிலும் சமம் ஆக, இரண்டாவது முறையாக சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட அதில் இந்தியா வெற்றி பெற்றது.
இதனால் ஆப்கானிஸ்தானை கொஞ்சம் கூட குறைத்து மதிப்பிட முடியாது. இதனால் இந்திய அணி வீரர்கள் தங்களுடைய திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டும். இந்த சூழலில் பிளேயிங் லெவனில் என்ன மாற்றத்தை கொண்டு வரலாம் என்ற குழப்பத்தில் கேப்டன் ரோகித் சர்மா இருக்கின்றார். ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் கொண்டு வர வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் யாருக்கு பதிலாக கொண்டு வர வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. முகமது சிராஜ் போன்ற வேகப்பந்துவீச்சாளரை நீக்கி குல்தீப் யாதவை சேர்க்கலாமா? இல்லை ஜடேஜா போன்ற அனுபவ வீரருக்கு பதிலாக சேர்க்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இதேபோன்று விராட் கோலி தொடக்க வீரராக தடுமாறி வரும் நிலையில் அவரை நம்பர் மூன்றாவது இடத்திற்கு அனுப்பலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி நடைபெறும் பட்சத்தில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்க கூடும். ஜெய்ஸ்வால் அணிக்குள் வந்தால் சிவம் துபேவுக்கு அணியில் இடம் இருக்காது. இதனால் இந்தியா என்ன மாதிரியான மாற்றங்களை செய்யப்போகிறது என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த போட்டி வியாழக்கிழமை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.