பார்படாஸ் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியின் சிவம் துபே வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். ஸ்பின்னர்களை விளாசும் திறமையை கொண்டுள்ள சிவம் துபே, ரஷீத் கான் பவுலிங்கிலேயே ஆட்டமிழந்து வெளியேறி இருப்பதால், ரசிகர்கள் அவருக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிவம் துபே தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே அவரின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்து வந்தது. ஐபிஎல் தொடரில் சிக்சர் துபேவாக இருந்து வந்த அவர், இந்திய அணியில் இடம்பிடித்த பின் டக் அவுட் துபேவாக வெளியேறினார். அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே ஆடிய ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் கொந்தளித்தனர்.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் சிவம் துபே 3 போட்டிகளில் விளையாடி 34 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். பேட்டிங்கிற்கு கடினமான பிட்ச் என்பதால், சிவம் துபேவை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சிவம் துபேவின் அதிரடி தேவை என்பதால் ரோகித் சர்மா தொடர்ந்து வாய்ப்பளித்தார்.
இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதில் இந்திய அணி 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு பக்கம் ரஷீத் கான், இன்னொரு பக்கம் நூர் அஹ்மத் ஆகியோர் அட்டாக்கில் வர, சரியான நேரத்தில் சிவம் துபே களம் புகுந்தார். இதனால் மீண்டும் தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என்று பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப நூர் அஹ்மத் பவுலிங்கில் அபாரமாக ஒரு சிக்சரை விளாசி சிறப்பாக தொடங்கினார். இதனை வர்ணனையில் இருந்த தினேஷ் கார்த்திக், சிவம் துபேவால் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ அதனை செய்ய தொடங்கியுள்ளதாக பாராட்டினார். இதனைத் தொடர்ந்து ரஷீத் கானை எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிவம் துபே ஆட்டமிழந்தார். மிடில் ஸ்டம்பில் பிட்சாகி காலிற்குள் புகுந்த பந்து சரியாக சிவம் துபேவின் பின் காலில் அடித்து சென்றது.
அதற்கு நடுவர் நாட் அவுட் என்று கூற, கேப்டன் ரஷீத் கான் நம்பிக்கையுடன் டிஆர்எஸ் அப்பீல் கோரினார். அதில் பேட்டிற்கு பின் கால் பேடில் பந்து அடித்தது தெரிய வந்தது. இதனால் அதிரடி வீரரான சிவம் துபே 7 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் சிவம் துபேவை ரசிகர்கள் பொளந்து கட்டி வருகின்றனர்.