ஆப்கானிஸ்தானை கொடுமை படுத்தினோமா? மரியாதையுடன் பேச வேண்டும்.. ஸ்ரேயாஸ் ஐயர் காட்டம்
டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்தது. இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்த நிலையில், அதன் பிறகு நடைபெற்ற ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது.
போட்டிக்குப் பிந்தைய நேர்காணலில் பேசிய இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், எதிரணியை கொடுமைப்படுத்தினீர்களா என்ற கேள்விக்கு, எதிரணியைகுறைத்து மதிப்பிட முடியாது என்றும், அவர்களின் முயற்சிக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இது பேட்டிங் செய்வதற்கு எளிதான ஆடுகளம் கிடையாது என்றாலும், அபிஷேக் சர்மா இன்று விளையாடிய விதம் அபாரமானது என்றும், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது என்றும் பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "உண்மையைச் சொல்வதானால், நாம் இன்று முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம் என்பது எனக்கு முன்பே தெரியும். ஏனெனில், நான் பிரையனுடன் இது குறித்து சுருக்கமாகப் பேசினேன். அவர் முதல் இரண்டு போட்டிகளிலும் முதலில் பந்துவீசவே விரும்பினார். எனவே, இன்று நாம் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
நமக்குக் கிடைத்த சிறப்பான தொடக்கத்திற்குப் பிறகு, ரன்களைக் குவித்து ஸ்கோர்போர்டில் 220 ரன்களைச் சேர்த்தது பாராட்டத்தக்கது" என்று அவர் கூறினார்.அக்சர் படேலின் சிறப்பான பந்துவீச்சு குறித்துப் பேசிய அவர், "அக்சர் படேல் கடந்த காலத்திலும் இதைச் செய்துள்ளார், இப்போதும் அதைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவரிடம் அளப்பரிய அனுபவம் உள்ளது. இக்கட்டான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
அந்த நேரத்தில் அவரே அணியை மீட்பவர். பல ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் அவர், தனது ஆட்டத்தைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்" என்று புகழாரம் சூட்டினார்.


Click it and Unblock the Notifications


