பேட்டிங் வரிசையில் என்னுடைய இடம் எது என்றே தெரியாது.. அது தான் கடினம்.. சிவம் துபே கவலை
டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் சிவம் துபே நடுவரிசையில் பேட்டிங் செய்வதில் உள்ள சவால்களை பகிர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, இந்திய அணி நிர்வாகம் 33 வயதான துபேயை சூழலுக்கு ஏற்ப டி20 கிரிக்கெட்டில் பயன்படுத்தி வருகிறது.
2024 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்று டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவதில் துபே முக்கியப் பங்கு வகித்துள்ளார். 73 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த இடதுகை பேட்ஸ்மேன், 3 முதல் 8 வது வரிசை வரை அனைத்து நிலைகளிலும் களமிறங்கியுள்ளார். மேலும், 29.65 என்ற சராசரியையும், 152.09 என்ற ஸ்ட்ரைக் ரேட்டையும் அவர் கொண்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "எனது பேட்டிங் வரிசை நிலையானது அல்ல என்பதால் இது எப்போதும் கடினமானது. அணியின் தேவையைப் பொறுத்தே என் பேட்டிங் வரிசை அமைகிறது. 6 ஓவர்களுக்குப் பிறகு நான் பேட்டிங் செய்ய வேண்டும் என்று அணி விரும்பினால், அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். 12 ஓவர்களுக்குப் பிறகு தேவைப்பட்டாலும், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். இது கடினமான பணிதான் என்றாலும், அணியின் தேவைக்கேற்ப நான் களமிறங்கி பங்களிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது." துபே தனது 56 டி20 இன்னிங்ஸ்களில் 36 இன்னிங்ஸ்களை 5 மற்றும் 6 வது வரிசையிலேயே விளையாடியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் டி20 போட்டிகளில் அவரது பந்துவீச்சு வியக்கத்தக்க வகையில் முன்னேறியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 40 போட்டிகளில் விளையாடியுள்ள துபே, 20.55 என்ற சிறந்த சராசரியில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
"ஒரு ஆல்-ரவுண்டராக, கடினமான ஓவர்களை நான் வீச வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. ரன்களைக் கட்டுப்படுத்த அல்லது முக்கியமான நேரத்தில் விக்கெட் எடுக்க என்னை அழைக்கிறார்கள். நான் எப்போது பந்துவீச வேண்டும் என்பதில் தெளிவான திட்டம் இல்லாததால், எப்போது அழைக்கப்படுவேன் என்று தெரியாது. அதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன்," என்று துபே கூறினார்.
"மோர்னே மோர்கல் எனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளார். நல்ல பந்துகளை வீசுவது முக்கியம் தான், ஆனால் ஒரு பந்துவீச்சாளராக ஆட்டத்தை சரியாகக் கணிப்பது அதைவிட முக்கியம் என்று அவர் கூறினார். எனவே, நான் இப்போது அதில் கவனம் செலுத்தி வருகிறேன். பேட்ஸ்மேன்களை விட நான் சாதுரியமாகச் செயல்பட வேண்டும். அவர்கள் எந்தப் பக்கமாக அடிக்க முயற்சிப்பார்கள் என்பதை நான் முன்கூட்டியே அறிய வேண்டும். எனவே நாங்கள் இருவரும் ஒரே திசையில் உழைத்து, நாளுக்கு நாள் எங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறோம்" என்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13 அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் சார்பாக சிவம் துபே களம் காணவுள்ளார்.


Click it and Unblock the Notifications
