பார்படாஸ் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் - ஹர்திக் பாண்டியாவின் பார்ட்னர்ஷிப் முக்கிய காரணமாக இருந்தது என்றும், பும்ராவின் பவுலிங்கை ஸ்மார்டாக பயன்படுத்தியதன் விளைவே இந்திய அணியின் அபார வெற்றிக்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா இருவரும் 5வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது சவாலான இலக்கை நிர்ணயிக்க காரணமாக அமைந்தது.

இதன்பின் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் காரணமாக இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த வெற்றிக்கு பின் ரோகித் சர்மா பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 போட்டிகளை விளையாடி இருக்கிறோம்.
அதனால் முன்கூட்டியே எங்களால் திட்டமிட முடிந்தது. இந்த பிட்ச் மற்றும் சூழலுக்கு விரைவாக மாற்றிக் கொள்ள முடிந்தது. 181 ரன்ற சவாலான இலக்கை நிர்ணயித்த இந்திய அணியின் பேட்டிங்கை பாராட்ட வேண்டும். ஏனென்றால் 181 ரன்கள் இருக்கும் போது அனுபவம் வாய்ந்த எங்களின் பவுலிங் யூனிட்டால் என்ன செய்ய்ய முடியும் என்று நன்றாக தெரியும்.
சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரின் பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு வீரரும் அவர்களின் ரோலை சரியாக செய்து வருகின்றனர். பும்ராவால் என்ன செய்ய முடியும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் பும்ராவை ஸ்மார்ட்டாக பயன்படுத்த வேண்டும். இந்திய அணியில் பொறுப்பை எடுத்து கொண்டு செய்து முடிக்கும் பழக்கம் கொண்டவர் அவர் தான். எந்த சூழலில் விளையாடினாலும், பும்ரா தான் வீரராக பொறுப்பை தன் மீது ஏற்றிக் கொள்வார்.
இன்றைய ஆட்டத்தில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கினோம். அது சூழலையும், பிட்சையும், எதிரணியை கணித்தே செய்யப்பட்ட மாற்றங்கள். இந்த பிட்சில் ஸ்பின்னர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைத்தோம். அதனால் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கினோம். அதேபோல் அடுத்தடுத்த போட்டிகளில் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.