பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் புதிய சாதனை ஒன்றை படைத்தார். சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய முதல் ஆட்டத்தை விளையாடியது.
இந்தியா தங்களுடைய மூன்று ஆட்டங்களையும் அமெரிக்க ஆடுகளங்களில் தான் விளையாடுகிறது. அது பேட்டிங்கிற்கு சுத்தமாக எடுபடவில்லை. இந்த நிலையில் ஓரளவுக்கு நல்ல ஆடுகளமாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இதனால் மிகப்பெரிய இலக்கை இந்தியா எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ரோகித் சர்மா எட்டு ரன்களிலும், விராட் கோலி 24 ரன்களிலும், ரிஷப் பண்ட் 20 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த நிலையில் டி20 சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார்.
மற்ற வீரர்கள் எல்லாம் தடுமாறும் நிலையில் சூரிய குமார் யாதவும் மட்டும் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி காட்டி வருகிறார். இந்த நிலையில் சூரியகுமார் யாதவ், ஒரு சாதனையை படைத்திருக்கிறார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை சூரியகுமார் படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பாக ரசிகர்கள் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா 221 ரன்கள் அடித்திருந்தது சாதனையாக இருந்தது. தற்போது சூரியகுமார் யாதவ் முதலிடம் பிடித்திருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் ஸ்டார் வீரர் ரிஷப் பண்ட் இருக்கிறார்.இவர் 194 ரன்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். இவர் 193 ரன்கள் அடித்திருக்கிறார்.