பார்படாஸ் : அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி சக இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு 4 டி20 போட்டிக்கும் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வெல்வது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 53 ரன்களை விளாசினார். இதன் மூலமாக ஆட்டநாயகன் விருதையும் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்காவில் நடந்த 3 லீக் போட்டிகளிலும் இந்திய அணியின் பவுலர்களே ஆட்டநாயகன் விருதை வென்றனர். பும்ரா இருமுறையும், அர்ஷ்தீப் சிங் ஒருமுறையும் வென்று அசத்தினர். இந்த நிலையில் முதல்முறையாக இந்திய அணியின் பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் வென்றிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் பெறும் 15வது ஆட்டநாயகன் விருது இதுவாகும். இதன் மூலமாக விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார். இதுவரை 120 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தி இருக்கிறார். ஆனால் சூர்யகுமார் 64 போட்டிகளில் விளையாடி 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் மலேசியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் விரந்தீப் சீங் 78 போட்டிகளில் 14 முறை ஆட்டநாயகன் விருது வென்று 13வது இடத்திலும், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா 86 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்டநாயகன் விருது வென்று 4வது இடத்திலும், ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 126 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்டநாயகன் விருது வென்ரு 5வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் ஒவ்வொரு 4 போட்டிகளுக்கும் ஒருமுறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக சூர்யகுமார் யாதவ் இருந்து வரும் நிலையில், இம்முறை ஐசிசி கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.