பார்படாஸ் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் விளாசிய அரைசதம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. விராட் கோலி, சிவம் துபே உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போது, ஆஃப்கான் பவுலர்களை கொஞ்சம் கூட அச்சமின்றி சூர்யகுமார் யாதவ் பொளந்து கட்டி 53 ரன்களை சேர்த்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்துள்ளது. பார்படாஸ் மைதானத்தில் 170 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்வது கடினமாக பார்க்கப்படும் நிலையில், இந்திய அணி சவாலாக இலக்கை நிர்ணயித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முழுமையான காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அமைந்துள்ளார். 28 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 53 ரன்களை விளாசி சூர்யகுமார் யாதவ் அசத்தியுள்ளார். வழக்கமாக டி20 கிரிக்கெட்டில் 7வது ஓவர் முதல் 15வது ஓவர் வரையிலும் பவுலிங் செய்யும் அணி கட்டுப்பாட்டை எடுத்து கொள்ளும். ஏனென்றால் ஃபீல்டர்களை தேவையான இடத்தில் நிறுத்த முடியும்.
அதற்கேற்ப 7வது ஓவர் முடிவில் ரிஷப் பண்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இவரின் விக்கெட்டை வீழ்த்த ரஷீத் கான் அடுத்தடுத்த ஓவர்களை வீசிய போதும், விக்கெட்டை காப்பாற்றியதோடு தேவையான பவுண்டரிகளையும் சூர்யகுமார் யாதவ் விளாச தொடங்கினார்.
எதிர்முனையில் நின்ற விராட் கோலி, சிவம் துபே உள்ளிட்டோர் ஆட்டமிழந்த போதும், சூர்யகுமார் யாதவ் கொஞ்சம் கூட பதற்றப்படாமல் பவுண்டரிகளை விளாசினார். ஒரு கட்டத்தில் ரஷீத் கான் வீசிய 11வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி அதிர்ச்சி கொடுத்தார். டீப் ஸ்கொயர் லெக் மற்றும் ஒய்டு மிட் ஆஃப் திசையில் ஃபீல்டிங்கிற்கு ஏற்ப சூர்யகுமார் யாதவ் ஆடிய ஷாட்கள் மிரள வைத்தது.
அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற சூர்யகுமார் யாதவ், இன்றைய ஆட்டத்தில் தனது ஸ்டைலில் அதிரடியாக விளையாடி கவுரவமான இலக்கை எட்ட காரணமாக அமைந்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்றால் சும்மாவா என்று சூர்யகுமார் யாதவை பாராட்டி வருகின்றனர்.