பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த உலகக் கோப்பையில் குரூப் சுற்று முடிவடைந்து அடுத்து சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது, ஏனெனில், இந்தியா இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே ஆட வேண்டும். அந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும் அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.

இந்த பிரிவில் அடுத்து நடைபெற உள்ள போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியாவை வீழ்த்தினால் 4 புள்ளிகளை பெறும். அதே போல, ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தும் பட்சத்தில் அந்த அணியும் நான்கு புள்ளிகளை பெற்றிருக்கும். அப்போது எந்த அணி அதிக நெட் ரன் ரேட் வைத்துள்ளதோ அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும்.
அந்த வகையில் பார்த்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கும் சரிசமமான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்த பிரிவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினால், இறுதி போட்டியில் சந்திக்க வாய்ப்பு உள்ளது. சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பெறும் பணிகள் அரையிறுதியில் இரண்டாம் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பெறும் இரண்டு அணிகளை சந்திக்க வேண்டும்.
எனவே, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதியில் மோத வாய்ப்பு இல்லை. அரை இறுதிப் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களின் எதிரணிகளை வீழ்த்தும் பட்சத்தில், 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் மோத வாய்ப்பு ஏற்படும். அப்படி நடந்தால் இந்திய அணி தான் நிச்சயமாக கோப்பை வெல்லும் என ரசிகர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
இதுவரை இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒன்பது சர்வதேச டி20 போட்டிகளில் மோதி உள்ளன. அதில் இந்தியா எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. எனவே, ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் இந்திய அணிதான் உலகக் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.