முகமது ஷமிக்கு நடந்த அநியாயம்.. பும்ரா என்றால் இப்படி செய்வீர்களா?’ - வாசிம் ஜாபர் காட்டம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷமியின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் அளித்த விளக்கம் "குப்பையானது" என்றும், இது ஒரு மூத்த வீரரை அவமதிக்கும் செயல் என்றும் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஷமியின் பெயர் இடம்பெறாதது குறித்து விளக்கமளித்த அஜித் அகர்கர், ஷமி தற்போது டி20 போட்டிகளில் விளையாட மட்டுமே உடல் தகுதியுடன் இருப்பதாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டின் சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை இன்னும் தேறவில்லை என்றும் தெரிவித்தார். இதனாலேயே தேர்வுக் குழு கூட்டத்தில் அவரது பெயர் ஆலோசிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

வாசிம் ஜாபர் காட்டம்
அகர்கரின் இந்த விளக்கத்தை முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அகர்கர் சொல்வது முற்றிலும் முட்டாள்தனமானது. நாம் இங்கே சாதாரண வீரரைப் பற்றி பேசவில்லை, முகமது ஷமியைப் பற்றிப் பேசுகிறோம். ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணியைத் தனது அபாரமான பந்துவீச்சால் அரையிறுதி வரை அழைத்துச் சென்ற ஒரு வீரரை, டி20-க்கு மட்டுமே தகுதியானவர் என்று சொல்வது அவரை அவமதிக்கும் செயல். அவரைத் தேர்வு செய்ய உங்களுக்கு விருப்பமில்லை என்றால் 'நாங்கள் இளம் வீரர்களைப் பார்க்கிறோம்' என்று வெளிப்படையாகச் சொல்லுங்கள். அதை விடுத்து உடல்நிலையைக் காரணம் காட்டுவது வெறும் சாக்குப்போக்கு" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
பும்ராவுடன் ஒப்பீடு
மேலும், ஜஸ்பிரித் பும்ராவுடன் ஷமியை ஒப்பிட்டுப் பேசிய ஜாபர், "ஒருவேளை ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டு அவர் மீண்டும் அணிக்குத் திரும்பும்போது இதேபோலத் தான் நடத்துவீர்களா? சர்வதேச அளவில் எந்த ஒரு சிறந்த பேட்ஸ்மேனிடம் கேட்டாலும், உலகின் டாப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக ஷமியைத் தான் கைக்காட்டுவார்கள். நாட்டுக்காக அவர் செய்த சேவைகளுக்கு இது சரியான மரியாதையல்ல" என்று சாடியுள்ளார்.
2027 உலகக் கோப்பையை முன்னிட்டு இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ள நிலையில், 35 வயதான ஷமி போன்ற சீனியர் வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக ஏற்கனவே பல போட்டிகளைத் தவறவிட்ட ஷமிக்கு, பிசிசிஐ-யின் இந்த அணுகுமுறை பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 2023 உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய ஷமிக்கு இழைக்கப்படும் இந்த அநீதி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications
