IND vs AFG: ரிஷப் பண்ட் என்ன தப்பு செஞ்சாரு? பதவியை பறித்த பிசிசிஐ-க்கு முகமது கைஃப் கடும் கண்டனம்
மும்பை: ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்டின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டதை முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையாகச் சாடியுள்ளார். ஐபிஎல் ஆட்டத்தை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் தகுதியைத் தீர்மானிப்பது தவறான முன்மாதிரி என்று அவர் எச்சரித்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், 13 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுத் தந்தார். பேட்டிங்கிலும் 28.6 சராசரியுடன் 289 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் காரணமாகவே ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கான துணை கேப்டன் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டு கே.எல்.ராகுலிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒருநாள் போட்டித் தொடரிலிருந்தும் பண்ட் நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் ஆட்டம் வேற.. டெஸ்ட் வேற
பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கைஃப், "ரிஷப் பண்ட் எந்தத் தவறும் செய்யவில்லை. சிவப்புப் பந்து கிரிக்கெட் (டெஸ்ட்) மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் (ஒருநாள், டி20) ஆகிய இரண்டுமே முற்றிலும் மாறுபட்டவை. ஐபிஎல் தொடரில் அவரது அணி தோற்கிறது அல்லது அவர் ரன் எடுக்கவில்லை என்பதற்காக டெஸ்ட் அணியில் அவரது பதவியைப் பறிப்பது நியாயமற்றது. இந்திய டெஸ்ட் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் ரிஷப் பண்ட்டை விடப் பெரிய மேட்ச் வின்னர் யாரும் இல்லை" என்றார்.
தேர்வுக் குழுவின் இரட்டை வேடம்?
மேலும், பிசிசிஐ-யின் சீரற்ற கொள்கை குறித்து விளாசிய கைஃப், "ஒருபுறம் முகமது ஷமிக்கு வயது அதிகமாகிவிட்டது என்று கூறி அவரை அணியிலிருந்து ஓரம் கட்டுகிறீர்கள். ஆனால் 34 வயதான கே.எல்.ராகுலுக்குத் துணை கேப்டன் பதவி வழங்குகிறீர்கள். ஒரு வீரரைத் தேர்வு செய்யும்போது அவரது ஃபார்மை மட்டும் பாருங்கள் அல்லது வயதை மட்டும் பாருங்கள். இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. துணை கேப்டனாகத் தொடர ரிஷப் பண்ட்டுக்கு அனைத்துத் தகுதிகளும் உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஜூன் 6 முதல் 10 வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 14, 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. பிசிசிஐ-யின் இந்த அதிரடி மாற்றம் மற்றும் கைஃப்பின் காட்டமான விமர்சனம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
