டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி விட்டு, அடுத்த 2 நாளில் டி20 விளையாடனும்.. திலக் விர்மா விமர்சனம்
சென்னை: 2026 துலீப் டிராபியில் சவுத் ஜோன் அணிக்காக திலக் வர்மாவின் ஆட்டம் ரசிகர்கள் மற்றும் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடப்பு தொடரில் 116*, 51* மற்றும் 99 ரன்கள் எடுத்து, தனது டெஸ்ட் கிரிக்கெட் திறமையை அவர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து, துலீப் டிராபியில் சவுத் ஜோன் அணியை இறுதிப்போட்டிக்கு வழிநடத்தியதன் மூலம் அவரது கேப்டன்சி பெணியும் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திலக் வர்மா, "ஆமாம், எனது தனிப்பட்ட ஆட்டம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடப்போவது முற்றிலும் மாறுபட்ட வகையிலான கிரிக்கெட். எனவே, நான் மீண்டும் எனது ஆட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இதைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்று தெரிவித்தார்.

"எனது தற்போதைய இலக்கு ஆப்கானிஸ்தான் தொடரை வெல்வதுதான். எனவே நான் அதே நம்பிக்கையுடன் களமிறங்குவேன், அது எப்படிப் போகிறது என்று பார்ப்போம். இது மிகவும் எளிதானது என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் பயிற்சி பெற எங்களுக்கு இரண்டு நாட்கள் உள்ளன. உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் இரண்டிலும் நாங்கள் ஏற்கனவே சிவப்பு பந்திலிருந்து வெள்ளை பந்துக்கு மாறிய அனுபவம் பெற்றுள்ளோம். எனவே, இதுவும் அதே போன்றதுதான்," என்றார்.
"நான் இதற்கு முன்பு ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளேன், அங்கிருந்து சர்வதேச வெள்ளை பந்து தொடருக்குச் சென்றேன். அதற்கு நான் பழகிக்கொண்டேன். எனவே, இரண்டு நாட்கள் பயிற்சி போதுமானது என்றும், அங்கிருந்து ஆப்கானிஸ்தான் தொடருக்கு தயாராக முடியும் என்றும் நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
"நான் எனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையை சிவப்பு-பந்து கிரிக்கெட்டில்தான் தொடங்கினேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் என்னைப் பார்த்தால், நான் வெள்ளை-பந்து கிரிக்கெட்டை அதிகமாக விளையாடி வருகிறேன்," என்று அவர் கூறினார்.
"ஆனால் நான் கூறியது போல், சிவப்பு பந்து எப்போதுமே எனக்கு பிடித்தமான ஆட்டமாக இருந்து வருகிறது, அதுதான் எனது சிறந்த ஆட்டம். இருப்பினும், கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் நான் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறேன்," என்று குறிப்பிட்டார்.
"கேப்டன்ஷி எனக்கு ஒரு பெரிய பாடமாக உள்ளது. ஏனெனில் இப்போது சவுத் ஜோன் அணியில் பல இளைஞர்கள் உள்ளனர், மேலும் நான் வழிநடத்திய இந்தியா ஏ அணியும் மிகவும் இளமையான ஒரு அணியாக இருந்தது," என திலக் கூறினார்.
"அணியில் சிறந்த திறமைகளும், ஒவ்வொரு தனிநபரிடமும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும்போது, அது கேப்டனுக்கு எளிதாகிறது. ஒரு கேப்டனாக நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. நான் ஒரு கேப்டனாக தொடர்ந்து வளர்ந்து வருகிறேன், தற்போது நான் அதை மிகவும் அனுபவித்து செய்து வருகிறேன்," என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலும் டி20 போட்டிகளில் விளையாடி தனக்கென ஒரு பெயரைப் பெற்றிருந்தாலும், திலக் வர்மாவிற்கு மிகவும் பிடித்த வடிவமாக சிவப்பு-பந்து கிரிக்கெட்டே நீடிக்கிறது. 24 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள 23 வயதான திலக், 55.77 சராசரியுடன் 1729 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதங்களும், 6 அரைசதங்களும் அடங்கும்.


Click it and Unblock the Notifications


