IND vs AFG: வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க வேண்டும்.. ரஹானே தடாலடி கருத்து
டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நீக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானே கருத்து தெரிவித்துள்ளார். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களம் இறங்கி, தொடக்க ஆட்டக்காரர் இடத்தை தக்கவைத்துக் கொள்ள மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் ஒன்-டவுன் வரிசையில் இஷான் கிஷன் ஆகியோரின் கூட்டணி இந்தியாவின் சாம்பியன் பட்ட வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியதைத் தொடர்ந்து, இந்திய அணி டாப்-3 வரிசையில் தொடர்ந்து சோதனைகளைச் செய்து வருகிறது.

இங்கிலாந்தில் நடந்த போட்டிகளில் சோபிக்கத் தவறியதைத் தொடர்ந்து சாம்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே, 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால், அவரால் மூன்று போட்டிகளிலும் தடம் பதிக்க முடியாமல் போனதால், இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டி20 போட்டியில் சாம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பினார்.
அதன் பின்னர், ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இருந்து சாம்சன் நீக்கப்பட்டார். ஆனால் அதற்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய ஆப்கானிஸ்தான் தொடருக்காக, ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடிய அதே அணியை பிசிசிஐ தக்கவைத்துள்ளது. இந்த அணியில் சாம்சன் மற்றும் சூர்யவன்ஷி ஆகிய இருவருமே இடம் பெற்றுள்ளனர்.
"உலகக் கோப்பையில் விளையாடிய டாப் 3 பேட்ஸ்மேன்களே தற்போதும் டாப் 3 இடங்களை அலங்கரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என ரஹானே தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். "சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார். அதன் பிறகு, இரண்டு அல்லது மூன்று இன்னிங்ஸ்களில் சரியாக விளையாடாததால் அவர் நீக்கப்பட்டிருக்கலாம்."
"ஆனால் சஞ்சு சாம்சனுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமக்காக சிறப்பாகச் செயல்பட்ட அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சூர்யவன்ஷிக்கு நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும், அவரது காலம் வரும். ஆனால் தற்போதைக்கு, உலகக் கோப்பையில் நமக்கு பங்களித்த சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரே டாப் 3 இடங்களுக்கு தகுதியானவர்கள் என்று நான் கருதுகிறேன்" என்று அவர் கூறினார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த துலீப் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடிய இஷான் கிஷன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய இருவருக்கும், டி20 போட்டி தங்களை மாற்றிக்கொள்ள வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


