பார்படாஸ் : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சிறந்த டெக்னிக் மூலமாக கடினமான பிட்ச்களிலும் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்த வந்த விராட் கோலி, நியூயார்க் மைதானம் சோதனை களமாக அமைந்தது. தற்போது வலைப்பயிற்சியிலும் விராட் கோலி சொதப்பி வருவது இந்திய ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதில் நாளை இந்திய அணி வலிமை வாய்ந்த ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலேயே லீக் போட்டிகளை விளையாடியுள்ளதால், ஆஃப்கானிஸ்தான் அணியால் இந்திய அணிக்கு நிச்சயம் சவால் அளிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஆஃப்கானிஸ்தான் அணியின் ஃபரூக்கி, நவீன் உல் ஹக், ரஷீத் கான் ஆகியோர் அனைத்து அணிகளையும் அச்சுறுத்தி வருகின்றனர். அதில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஃபரூக்கில் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்துவதில் அசத்தி வருகிறார். இதனால் இந்திய அணி வீரர்கள் பவர் பிளே ஓவர்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு வருகின்றன.
ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 3 போட்டிகளில் விளையாடி வெறும் 5 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர். அதற்கேற்றபடி விராட் கோலி வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.
அதில் நேற்று நடந்த பயிற்சியின் போது விராட் கோலி முதல் சில நிமிடங்கள் த்ரோ டவுன் பந்துகளை எதிர்கொண்டுள்ளார். அதனை அதிக தூரத்தில் விளாசிய விராட் கோலி, பின்னர் நட்சத்திர பவுலர்களான குல்தீப் யாதவ் மற்றும் கலீல் அஹ்மத் இருவரையும் எதிர்கொண்டுள்ளார். அதில் குல்தீப் யாதவ் வீசிய பெரும்பாலான பந்துகளை விராட் கோலியால் மிடில் ஆஃப் தி பேட்டில் அடிக்க முடிந்துள்ளது.
ஆனால் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அஹ்மத் பவுலிங்கில் விராட் கோலி திணறியுள்ளார். வழக்கமாக நெட்ஸில் விராட் கோலி எந்த பவுலரின் பந்துகளையும் மிஸ் செய்ததில்லை. ஆனால் நேற்றைய பயிற்சியின் போது கலீல் அஹ்மத் வீசிய பந்துகளை மிஸ் செய்தது அவருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதனால் பயிற்சி முடித்து திரும்பும் போது விராட் கோலி விரக்தியுடன் வெளியேறியதாக தெரிய வந்துள்ளது.