பார்படாஸ் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தரப்பில் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். பார்படாஸ் மைதானத்தில் குல்தீப் யாதவ் அல்லது சாஹல் ஆகியோரில் ஒருவரை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளதாக கூறியுள்ளார். இதனால் ஜடேஜா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரில் யார் நீக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி இன்று இரவு நடக்கவுள்ளது. இதற்காக 2 அணிகளை சேர்ந்த வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்பதால், இந்திய அணி தரப்பில் எந்த ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் 4 ஸ்பின்னர்களை இடம்பெற்றுள்ளனர்.

அந்த 4 பேரில் இதுவரை ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரையும் மட்டுமே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பயன்படுத்தியுள்ளார். சிறந்த ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் இருவரும் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் 3வது ஸ்பின்னரை இந்திய அணி களமிறக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சிராஜ் அல்லது அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஒருவர் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் கொண்டு வரப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், இந்திய அணியில் உள்ள எந்த வீரரையும் பெஞ்ச் செய்ய முடியாது. ஆனால் நியூயார்க் மைதானம் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. அதேபோல் பார்படாஸ் மைதானமும் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. அதனால் குல்தீப் யாதவ் அல்லது சாஹல் ஆகியோரில் ஒருவரை விளையாட வைக்க வாய்ப்புள்ளது. இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் அதிகமாக இருப்பது எங்களின் அதிர்ஷ்டம்.
தற்போதைய பிளேயிங் லெவனில் 8 பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதேபோல் 7 வீரர்களால் நன்றாக பவுலிங் செய்ய முடியும். அதனால் பேட்டிங் ஆர்டரையும் சூழலுக்கு ஏற்ப மாற்ற முடிகிறது. எந்த சூழலையும் நம்மால் கணிக்க முடியாது. அதனால் அனைத்து சூழல்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். வீரர்களையும் அப்படிதான் தயார்ப்படுத்தியுள்ளோம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அக்சர் படேலை 4வது வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பி வைத்தோம். அதேபோல் ரிஷப் பண்ட் நம்பர் 3ல் களமிறங்கினார்.
இதற்கு பின் ஏராளமான சிந்தனைகளும், ஆலோசனைகளும் உள்ளன. இதுபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு சாதகமான சூழல் அமையவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் மேட்ச்-அப்ஸ் சிறப்பாக அமைகிறது. மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் கிரிக்கெட் விளையாடுவதே மகிழ்ச்சியாக உள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணியை நிச்சயம் அச்சுறுத்தலான அணி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அந்த அணியின் வீரர்கள் ஏராளமான லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.