பார்படாஸ் : நியூயார்க் மைதானங்களில் முதல்முறையாக விளையாடியதால் அங்கிருக்கும் சூழல் எங்களுக்கு கொஞ்சம் சவாலாக இருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஏற்கனவே விளையாடி இருக்கிறோம். இதனால் லீக் போட்டிகளை விடவும் சூப்பர் 8 சுற்றில் கூடுதலாக ரன்களை சேர்க்க முடியும் என்று இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்களில் யாரும் இதுவரை 100 ரன்களை கூட எட்டவில்லை. லீக் போட்டிகள் அனைத்தும் நியூயார்க் மைதானங்களிலேயே விளையாடியதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடிப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. அந்த வகையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் மட்டும் ஒரேயொரு அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2 ஆண்டுகளாக நம்பர் 1 இடத்தில் இருக்கும் போது, கடினமான பிட்ச்களிலும் சிறப்பாக செய்ய வேண்டும். அணியின் தேவைக்கேற்ப இன்னிங்ஸை கட்டமைத்து சிறப்பாக முடிக்க வேண்டும். அதனை செய்ய தான் நானும் முயற்சித்து வருகிறேன்.
பிட்சில் வேகம் இல்லாத போது, ஷாட்டில் அதிக ஃபோர்சை நம்மால் உருவாக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் நமது பேட்டிங்கை எதிரணிகள் நன்றாக கணித்திருக்கும் போது சாதாரணம் கிடையாது. அதுபோன்ற நேரங்களில் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். சூழல் சரியாக அமையும் போது அதிரடிக்கு திரும்ப வேண்டும். அதேபோல் உடன் விளையாடும் பார்ட்னரையும் அமைதி காக்க வைக்க வேண்டும்.
அமெரிக்காவில் நாங்கள் முதல்முறையாக விளையாடுகிறோம். அதனால் சூழல், பிட்ச் ஆகியவற்றை கணித்து விளையாடுவதே சவாலாக இருந்தது. அந்த பிட்சில் விளையாடிய போதும் நாங்கள் மகிழ்ச்சியாக தான் இருந்தோம். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பிட்சில் ஏற்கனவே விளையாடிய அனுபவம் உள்ளது. இங்கிருக்கும் பிட்ச்கள் குறித்து நன்றாக அறிவோம்.
உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது என்பதை அறிந்த பின்னரே அமெரிக்காவில் பிட்ச்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் வெஸ்ட் இண்டீஸில் எப்போதும் பிட்ச்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதனால் நியூயார்க்கை விடவும் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சிறந்த பிட்ச்கள் இருக்கும். ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் தான் எனது பலமான ஷாட்கள். அதனால் பயிற்சியின் போது விளையாடிய ஷாட்களை போட்டியின் போதும் செயல்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.