பெர்த்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்திய அணியில் பும்ரா, முகமது சமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இல்லை.
ஆனால் மற்ற வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்பி இருக்கின்றனர். முக்கியமாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஒரு நாள் போட்டியில் விளையாடுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் பல குறைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆசஸ் தொடர் அடுத்த மாதம் தொடங்க இருப்பதால் அதற்கு தயாராகும் விதமாக பல முன்னணி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் இந்த தொடரில் விளையாடவில்லை.
இதேபோன்று காயம் காரணமாக அதிரடி வீரர் கேமரூன் கிரீன் இந்த தொடர் முழுவதும் விளையாடவில்லை. இதைப் போன்று சுழற் பந்துவீச்சாளர் அடம் சாம்பா மனைவியின் பிரசவத்திற்காக முதல் போட்டியில் விளையாடவில்லை. இதை போன்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி, ஆசஸ் தொடருக்கு தயாராகும் விதமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.
இது எல்லாம் ஆஸ்திரேலிய அணியின் மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. பிளஸ் என்று பார்த்தால் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஸ், நாதன் எலிஸ், ஸ்டார்க், ஜோஸ் ஹெசல்வுட் உள்ளிட்ட நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் அணிக்கு திரும்பிருக்கின்றனர். இதே போன்று மிட்ச் ஓவன், கூப்பர் கோன்னோளி மற்றும் மாட் குஹேமன் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அனுபவமின்மை ஒரு குறையாக பார்க்கப்பட்டாலும் இந்த வீரர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படி பயன்படுத்த போகிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆஸ்திரேலியாவில் முன்வரிசை வீரர்களான மிச்செல் மார்ஸ், டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தால் ஆஸ்திரேலிய அணி தடுமாற வாய்ப்பு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கடைசியாக இந்த மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 152 மற்றும் 140 ரன்களில் சுருண்டு இருக்கிறது. இது இந்தியாவுக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.