மொஹாலி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மோத உள்ள இந்திய அணி பலவீனமாக காட்சி அளிக்கிறது. ஆறு இந்திய வீரர்கள் ஃபார்ம் அவுட்டில் உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணி பலமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது கடினம். உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணி தோல்வி அடைந்தால் அதுவும் அணியை பாதிக்கும்.

ஒருநாள் தொடர் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 22 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற உள்ளது.
வாய்ப்பு கொடுக்கும் இந்தியா : இந்திய அணியில் உலகக்கோப்பை அணியில் இடம் பெறாத மூன்று வீரர்களுக்கு இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் உலகக்கோப்பை அணியில் மாற்று வீரராக இடம்பெறக் கூடும்.
முக்கிய வீரர்கள் இல்லை : மற்ற வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் முக்கிய வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இல்லாத நிலையில், கே எல் ராகுல் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது.
இந்திய அணி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் ஆட உள்ள உத்தேச இந்திய அணி : சுப்மன் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், அஸ்வின், ஷர்துல் தாக்குர், பும்ரா, ஷமி
சிறப்பாக ஆடும் வீரர்கள் : மேலே உள்ள இந்திய அணியில் சுப்மன் கில், இஷான் கிஷன், கே எல் ராகுல் என மூன்று பேட்ஸ்மேன்களும், பும்ரா, ஷமி என இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே சமீபத்தில் சிறப்பாக ஆடி இருக்கும் வீரர்கள். மற்ற வீரர்கள் அனைவருமே ஃபார்ம் அவுட் ஆகியோ அல்லது அதிக பலவீனங்களை கொண்டோ ஆடி வருகிறார்கள்.
யார் அந்த வீரர்கள்? : சூர்யகுமார் யாதவ் இன்னும் ஒருநாள் போட்டிகளில் தன் ஃபார்மை நிரூபிக்கவில்லை. மிக மோசமான சராசரியை கொண்டே அணியில் இடம் பிடித்து வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு வந்து ஒரு போட்டியில் மட்டுமே ஆடி இருக்கிறார். அதிலும் ரன் குவிக்கவில்லை. அவரது உடல்நிலை போட்டிகளில் ஆட தயாராகிவிட்டதா? என்பது கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் அவர் அணியில் இடம் பெறப் போகிறார். ஷர்துல் தாக்குர் விக்கெட் எடுப்பார், ஆனால் ரன்களை வாரி வழங்குவார். அதனாலேயே அணிக்கு பாதகமான சூழல் ஏற்படும்.
அஸ்வின், சுந்தர் : சுழற் பந்துவீச்சாளர்களாக இந்தப் போட்டியில் ஆடப் போகும் அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் இருவருமே நீண்ட காலமாக ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. அஸ்வின் பல ஆண்டுகளாகவே ஆடவில்லை. அவர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பது தெரியாத நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர்த்து திலக் வர்மாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். அவரும் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா தயார் : மேலே சொன்ன வீரர்கள் தவிர ஃபார்மில் உள்ள வீரர்களும் சரியாக செயல்படாமல் போனால் இந்திய அணிக்கு மேலும் சிக்கல் தான். மறுபுறம், ஆஸ்திரேலிய அணி முழு பலத்துடன் களமிறங்க உள்ளது. ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் என அந்த அணி உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் அனுபவ வீரர்களை கொண்டு இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும். இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெல்லுமா?