மொஹாலி : ஆஸ்திரேலிய அணி இரண்டாம் கட்ட இந்திய அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தான் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்து இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் அணித் தேர்வு தான். இந்திய அணியில் முக்கிய வீரர்கள் பலர் இல்லாத நிலையில், ஆஸ்திரேலியா போராடியாவது இந்தப் போட்டியை வென்று இருக்க வேண்டும்.
தவறான தேர்வு : ஆனால், கிரிக்கெட் ஆடத் தெரியாத அணி போல ஆடி சொதப்பி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியில் அதிக ஆல் - ரவுண்டர்கள் இருந்தது தான். ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை விட ஆல் - ரவுண்டர்கள் தான் தேவை என அந்த அணி முடிவு எடுத்தே தன் அணித் தேர்வை செய்துள்ளது. அதுவே அந்த அணிக்கு பாதகமாகவும் மாறி உள்ளது.
பத்து பேட்ஸ்மேன்கள் : முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசியது. ஆஸ்திரேலிய அணி பத்து பேட்ஸ்மேன்களை கொண்டு ஆடியது. ஆம், நான்கு பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆறு ஆல்-ரவுண்டர்களை கொண்டு அந்த அணி ஆடியது. ஆனாலும், அதிரடி ஆட்டம் ஆடாமல் நிதானமாக ஆடியது. மத்திய ஓவர்களிலேயே விக்கெட்களை இழந்ததால், கடைசி ஓவர்களில் அதிரடி காட்டினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டும் போனதால் அந்த அணியால் 300 ரன்களை எட்ட முடியாமல் போனது.
தவறிப் போன கேட்ச் வாய்ப்புகள் : அடுத்து பந்துவீச்சின் போது ஆஸ்திரேலியா நிறைய கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது. அவை அனைத்துமே பவுலருக்கே வந்த கேட்ச் வாய்ப்புகள். குறிப்பாக் ஆடம் ஜம்பாவிற்கு மட்டுமே அவரது பந்துவீச்சிலேயே மூன்று கேட்ச் வாய்ப்புகள் தவறிப் போனது.
அதிக ஆல்-ரவுண்டர்கள் : அதிக ஆல் - ரவுண்டர்கள் இருந்தாலும் அது பேட்டிங்கில் பெரிய பலனை அளிக்கவில்லை. பந்துவீச்சில் சுத்தமாக ஆல் - ரவுண்டர்கள் எடுபடவில்லை. மார்கஸ் ஸ்டோனிஸ் 5 ஓவர்களில் 40 ரன்களும், கேமரான் கிரீன் 6 ஓவர்களில் 44 ரன்களும் விட்டுக் கொடுத்தது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர்கள் இருவருமே ஆல்-ரவுண்டர்கள் தான்.
போட்டி பயிற்சி இல்லை : அதைத் தவிர இரண்டு முறை ரன் அவுட் வாய்ப்பை ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு வழங்கியது. அதில் ஒரு முறை இந்தியா ரன் அவுட் செய்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரே அணியாக சில போட்டிகளில் ஆடினால் தான் அவர்களுக்குள் புரிதல் ஏற்படும். திடீரென உலகக்கோப்பைக்கு முன் ஒரு தொடரில் ஆடுவோம் என நினைத்தால் அவர்களுக்குள் சரியான புரிதல் இல்லாமல் இப்படி ரன் அவுட் ஆவதை தவிர்க்க முடியாது.