மொஹாலி : இந்திய அணி வீரர் ஷர்துல் தாக்குர் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும் வீரராக வலம் வருகிறார்.
இந்திய அணியை பொறுத்தவரை விக்கெட் எடுக்கும் வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார். ஆனால், அந்த விக்கெட்டுக்கு ஒரு விலை உண்டு. அதாவது, அதிக ரன்களை விட்டுக் கொடுத்து தான் விக்கெட் வீழ்த்துவார் நமது வள்ளல் ஷர்துல் தாக்குர்.

தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை பயிற்சி ஆட்டமாகவே இந்தப் போட்டிகள் நடைபெறும் என்பதால் இரண்டாம் கட்ட வீரர்கள், மாற்று வீரர்கள் இந்த தொடரில் அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பு உள்ளது.
ஷர்துல் தாக்குர் மாற்று வேகப் பந்துவீச்சாளர் என்பதால் அவருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மூன்று போட்டிகளிலும் அவரை ஆட வைக்க வாய்ப்பு உள்ளது.
அவர் ஏற்கனவே, ஆசிய கோப்பை தொடரில் தான் ஆடிய போட்டிகளில் எல்லாம் ரன்களை வாரிக் கொடுத்தார். எனினும், இந்தியா பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ், ஜடேஜா போன்ற பிற பந்துவீச்சாளர்கள் குறைவாக ரன் கொடுத்ததால் அந்த தொடரில் தப்பியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் ஆட உள்ள அவர் இதற்கு முன்னதாக அந்த அணிக்கு எதிராக ஆடிய மூன்று ஒருநாள் போட்டிகளில் என்ன செய்தார்? என பார்த்தால் அதுவும் பீதியை கிளப்பும் வகையிலேயே உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ள ஷர்துல், அவற்றில் மொத்தமாக 17 ஓவர்கள் வீசி 3 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அவரது பவுலிங் சராசரி 35.33. ஒரு ஓவருக்கு கொடுத்த ரன்கள் சராசரி 6.23.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் அள்ளிக் கொடுத்து இருக்கிறார். இந்த எண்களை பார்த்தாலே கொஞ்சம் கிலியடிக்கத்தான் செய்கிறது. எனினும், டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா விக்கெட் வீழ்த்தும் வீரர் என்ற காரணத்தால் இவரை நம்புகின்றனர். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவாரா ஷர்துல்?