விசாகப்பட்டினம் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா முழு பலம் கொண்ட அணியை களமிறக்க உள்ளது. குறிப்பாக, உலகக்கோப்பையில் கலக்கிய அதிரடி ஆல் - ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் களமிறங்க இருக்கிறார்.
ஆனால், இந்திய அணியில் அனுபவமிக்க வீரர்கள் குறைவாகவே உள்ளனர். அதிகபட்ச அனுபவமிக்க வீரரே சூர்யகுமார் யாதவ் தான். அந்த காரணத்தால் தான் அவரை கேப்டனாக நியமித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், வலுவான ஆஸ்திரேலிய அணியை கேப்டன் சூர்யகுமார் யாதவ் சமாளிப்பாரா?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (நவம்பர் 23) நடைபெற உள்ளது. இந்திய அணியில் மூத்த வீரர்கள் ஓய்வில் இருக்கும் நிலையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்து இருக்கிறது பிசிசிஐ.
ஆனால், ஆஸ்திரேலிய அணி அனுபவமிக்க வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ட்ராவிஸ் ஹெட் மேத்யூ வேட், ஜேசன் பெஹரெண்டாஃப் ஆகியோருடன் களமிறங்க உள்ளது.
இதில் கிளென் மேக்ஸ்வெல் தான் மிகவும் ஆபத்தான வீரர். சமீபத்தில் அவர் உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சாளராகவும் கலக்கினார். இந்திய ஆடுகளங்களை பற்றி அதிகம் புரிந்து வைத்துள்ள வீரர். பேட்டிங்கில் தனி ஆளாக போட்டியை மாற்றக் கூடியவர். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150க்கு மேல் தான் இருக்கும். அதனால், அவர் ஒருவரை சமாளிக்கவே இளம் இந்திய அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். அதைத் தொடர்ந்து திலக் வர்மா மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வருவார். அடுத்த இடங்களில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிங்கு சிங் களமிறங்குவார்கள். பவுலிங்கில் அக்சர் பட்டேல், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் பந்து வீச உள்ளனர். வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் என்பதால் சிவம் துபே களமிறங்கவும் வாய்ப்பு உள்ளது.
இவர்களில் நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக இருப்பது சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரவி பிஷ்னோய், அக்சர் பட்டேல் மட்டுமே. மற்ற வீரர்கள் என்ன செய்வார்கள் என்பது முதல் டி20 போட்டிக்கு பின்னரே தெரிய வரும். ஆனால், ஆஸ்திரேலிய அணி முழு பலத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி தோல்விக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடரை தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. இளம் இந்திய அணி அதை செய்து காட்டுமா?