விசாகப்பட்டினம் : ஆஸ்திரேலிய அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஜாஸ் இங்கிலீஷ் அபாரமாக சதம் விளாசினார்.

இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள். இறுதியில் இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் வெற்றியை ஒரு பந்துகள் எஞ்சிய நிலையில் உறுதி செய்தார்.
கடைசி பந்தில் அவர் சிக்ஸர் அடிக்க அது நோபால் ஆக மாறியது. இந்த நிலையில் 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்தும் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவி இருக்கிறது. இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியாவின் தற்காலிக கேப்டன் மேத்யூ வெட், இந்த ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. இறுதியில் நாங்களும் போராடி விக்கெட்டுகளை எடுத்தோம்.
பேட்டிங்கில் எங்கள் அணியின் வீரர் இங்கிலீஷ் சிறப்பாக விளையாடி எங்களுக்கு ஒரு நல்ல இலக்கை தற்காத்துக் கொள்ள கொடுத்தார். ஆனால் இந்திய அணி வீரர்கள் எங்களை நோக்கி அதிரடியாக விளையாடினார்கள். இந்த இளம் இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் அதிகமாக விளையாடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக் கொள்கிறார்கள்.
நாங்களும் பந்துவீச்சில் நன்றாக தான் செயல்பட்டோம். ஆனால் எங்களுடைய யாக்கர்களை சரியாக வீச முடியவில்லை. சொல்வதற்கு சுலபமாக இருக்கலாம். ஆனால் இதுபோல சிறிய மைதானத்தில் செயல்படுத்துவது மிகவும் கடினம். இந்த போட்டியில் இருந்து நிறைய பாசிட்டிவ் விசயங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
இதேபோன்று எலிஸ் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை இறுதி ஒவர் வரை கொண்டு சென்றார். கடைசி பந்து வரை ஆட்டம் சென்று இருக்கிறது. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் வெற்றி தோல்வி எவ்வளவு குளோசாக இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என்று மேத்தீவ் வெட் கூறினார்.