பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தாலும் 46 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். அதனால், இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை வரிசையாக இழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இருந்தது. பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அடுத்து இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியது. இரண்டாவது நாளின் இரண்டாவது ஓவரிலேயே பும்ரா, அலெக்ஸ் கேரி விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். அதன் பின் ஹர்ஷித் ராணா நாதன் லியோன் விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 79 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து இருந்தது.
பின்னர் ஜோஷ் ஹேசல்வுட் - மிட்செல் ஸ்டார்க் இணைந்து 10வது விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலை பெற்றது. பும்ரா சிறப்பாக பந்து வீசி 18 ஓவர்களில் 30 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
முகமது சிராஜ் 13 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களையும், ஹர்ஷித் ராணா 15.2 ஓவர்களில் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.