பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தார் நிதிஷ் குமார் ரெட்டி. விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகிய பேட்ஸ்மேன்களை விட அதிக ரன்கள் எடுத்தார் நிதிஷ் குமார் ரெட்டி. இந்திய அணியிலேயே அதிக ரன் எடுத்தவராகவும் இருந்தார்.
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன்கள் எடுத்தார். அவர் இடையே கேட்ச் கொடுத்த போதும் அம்பயர் அவுட் தரவில்லை. 37 ஆவது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய அந்த ஓவரின் ஐந்தாவது பந்து நிதிஷ் குமார் ரெட்டியின் கிளவுஸில் பட்டு ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது.

மிட்செல் ஸ்டார்க் மட்டுமே இதை அவுட் என கருதி அம்பயரிடம் அவுட் கேட்டார். ஆனால், அம்பயர் அவுட் இல்லை என மறுத்து விட்டார். அதன் பின் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை பார்த்தார் மிட்செல் ஸ்டார்க். இது அவுட்டா? என அவரிடம் கேட்டார். ஆனால், அலெக்ஸ் கேரி அவுட் இல்லை எனக் கூறிவிட்டார்.
இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ரிவ்யூ செய்யவில்லை. பின்னர் இந்த பந்தை ரீப்ளேவில் பார்த்தபோது இது அவுட் என தெரிய வந்தது. பந்து நிதிஷ் குமார் ரெட்டியின் கிளவுஸில் பட்டு சென்றது தெரிந்தது. நிதிஷ் குமார் அப்போது 11 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர் 59 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்து ரிஷப் பண்ட் 78 பந்துகளில் 37 ரன்களும், கே எல் ராகுல் 74 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து இருந்தனர். இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியும் பும்ராவின் பந்துவீச்சில் திணறியது. 19 ரன்கள் எடுத்த நிலையில் 3 விக்கெட்களை பும்ராவிடம் இழந்தது ஆஸ்திரேலிய அணி. அடுத்து ஹர்ஷித் ராணா, ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 37 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.