திருவனந்தபுரம் : இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகேஷ் குமார் குறித்து அஸ்வின் ஒரு தகவலை கூறி அதிர வைத்துள்ளார்.
முகேஷ் குமாரை சிறந்த வேகப் பந்துவீச்சாளராக அடையாளம் காட்டியவரே பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் வக்கார் யூனிஸ் தான் எனக் கூறி இருக்கிறார் அஸ்வின்.
முகேஷ் குமார் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த முதல் டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசி பாராட்டைப் பெற்ற நிலையில், அவர் குறித்து சில தகவல்களை அஸ்வின் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த முகேஷ் குமார் எப்படி ஒரு நல்ல பவுலராக மேற்கு வங்காள கிரிக்கெட் அமைப்பால் அடையாளம் காணப்பட்டார் என்றும் அஸ்வின் கூறி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மேற்கு வங்காள கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்தார்.
அப்போது அந்த மாநிலத்தை சேர்ந்த சிறந்த கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் வகையில் திறமையாளர்களுக்கான தேர்வு ஒன்றை நடத்தினார். அதற்காக கிரிக்கெட் ஜாம்பவான்களான முன்னாள் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ், முன்னாள் இலங்கை சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆன விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரை வைத்து இளம் கிரிக்கெட் திறமையாளர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
அன்றைய தினம் இளம் வீரர்கள் அந்த ஜாம்பவான்கள் முன்பு பந்து வீசிக் காட்டி, பேட்டிங் செய்து காட்டினர். வேகப் பந்துவீச்சாளரான முகேஷ் குமார், வக்கார் யூனிஸ் இருக்கும் இடத்தில் இருந்தார். அப்போது கழிவறைக்கு சென்று இருந்த நேரத்தில் அவர் பெயரை அழைத்து இருக்கிறார்கள். ஆனால், அது முகேஷ் குமாருக்கு தெரியாது.
பின்னர் அரை மணி நேரம் கழித்து வக்கார் யூனிஸ் கிளம்பிய போது, தன் பெயர் இன்னும் அழைக்கப்படவில்லை என கூறி இருக்கிறார் முகேஷ் குமார். அதைக் கண்ட வக்கார் யூனிஸ் இரண்டு முறை மட்டும் பந்து வீசிக் காட்டுமாறு கூறி இருக்கிறார். முகேஷ் குமார் வீசிய அந்த இரண்டு பந்துகளிலேயே அவரிடம் திறமை இருப்பதை கண்டுபிடித்த வக்கார் யூனிஸ் அவரை தேர்வு செய்தார்.
அதன் பின்னரே முகேஷ் குமார் மேற்கு வங்காள மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடி, பின் ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் இடம் பிடித்தார். அன்று வக்கார் யூனிஸ் அந்த இரண்டு பந்துகளை வீசச் சொல்லவில்லை என்றால் இன்று முகேஷ் குமார் இந்திய அணியில் இடம் பிடித்து இருப்பாரா? என்பது தெரியாது. இது சம்பவத்தை தான் அஸ்வின் கூறி இருந்தார்.