மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், கேப்டன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் மிட்செல் மார்ஷ் உட்பட இரு அணி வீரர்களும் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்கினர். இதன் பின்னணியில் ஒரு பெரும் சோகம் அடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீரரான பென் ஆஸ்டின் என்பவரின் சோகமான மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவரது குடும்பத்தினருக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவிக்கும் வகையிலும் இரு அணி வீரர்களும் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.

மெல்போர்னைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான பென் ஆஸ்டின், ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். செவ்வாய்க்கிழமை அன்று, போட்டிக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தின்போது, கையில் வைத்துப் பந்துகளை வீசும் இயந்திரத்தில் இருந்து வந்த பந்து, எதிர்பாராதவிதமாக அவரது கழுத்துப் பகுதியில் அதிவேகமாகத் தாக்கியது.
அவர் ஹெல்மெட் அணிந்திருந்தபோதிலும், இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது. படுகாயமடைந்த அவர், உடனடியாக மோனாஷ் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன. ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அன்று அவர் உயிரிழந்தார்.
இந்தத் துயரச் சம்பவம், கிரிக்கெட் உலகை உலுக்கிய ஆஸ்திரேலிய வீரர் பில் ஹியூஸின் மரணத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. 2014-ஆம் ஆண்டில், இதே போன்று கழுத்தில் பந்து தாக்கியதால்தான் பில் ஹியூஸ் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பென் ஆஸ்டினின் மறைவு, ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அஞ்சலி ஆண்களுக்கான போட்டியுடன் நின்றுவிடவில்லை. நேற்று நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனைகள் பென் ஆஸ்டினின் நினைவாகக் கருப்புப் பட்டைகளை அணிந்து விளையாடினர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இரண்டாவது டி20 போட்டியைப் பொறுத்தவரை, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் பிலிப்பிக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.