IND vs AUS : தம்பி அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இந்திய டி20 அணியில் ஓரங்கட்டப்பட்ட தமிழக வீரர்
திருவனந்தபுரம் : இந்திய டி20 அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றாலும் அவருக்கு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் பெயர் இடம் பெற்றது. சுழற் பந்துவீசும் ஆல் - ரவுண்டர் என்பதால் அவரை தேர்வு செய்தது இந்திய அணி நிர்வாகம்.

ஆனால், அவர் முதல் டி20 போட்டியில் இடம் பெறவில்லை. வெளியே அமர வைக்கப்பட்டார். தற்போது அவருக்கு இரண்டாவது டி20 போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த டி20 தொடரில் மற்ற வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே சுந்தருக்கு அணியில் இடம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு முன் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் காயமடைந்த போது இந்திய அணியால் அவசர அவசரமாக அணியில் சேர்க்கப்பட்டவர் தான் வாஷிங்டன் சுந்தர். அதன் பின் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இளம் இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது அதிலும் இடம் பெற்று தங்கம் வென்ற அணியில் ஆடி இருந்தார். ஆனால், அடுத்த சில மாதங்களில் டி20 அணியில் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார்.
இதற்கு அவரது சமீபத்திய ஃபார்ம் தான் காரணம் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் ஐந்து போட்டிகளில் வாய்ப்பு பெற்ற வாஷிங்டன் சுந்தர் படுமோசமான ஆட்டத்தை ஆடி இருந்தார். ஐந்து போட்டிகளில் 17 ஓவர்கள் பந்து வீசி ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அவர் ஒரு ஓவருக்கு 7.35 ரன்கள் வேறு விட்டுக் கொடுத்து இருந்தார். பேட்டிங்கில் 4 இன்னிங்ஸில் 62 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.
இந்த மோசமான ஃபார்ம் காரணமாகவே தற்போது அவர் டி20 அனில் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார். இந்த தொடரில் அதிர்ஷ்டவசமாக ஒரு போட்டியில் ஆட வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சுந்தர். இல்லையெனில், இதுவே அவரது கடைசி சர்வதேச தொடராக இருக்கும்.


Click it and Unblock the Notifications