கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் அமைச்சர்களை நேற்று பாராளுமன்றத்தில் சந்தித்தனர். அப்போது ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் டிம் வாட்ஸ், விராட் கோலி உடனான தனது சந்திப்பை பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வேடிக்கையான பதிவு சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இரண்டாவது போட்டியில் அடுத்த வாரம் விளையாட உள்ளது. அதற்கு முன்பு ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.

அதை ஒட்டி ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் இந்திய வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் விராட் கோலியை நேரில் சந்தித்து அவருடன் பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதில் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் டிம் வாட்ஸ்-உம் ஒருவர். அவர் தனது சந்திப்பில் விராட் கோலியிடம் என்ன பேசினேன்? என்பது பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
"பாராளுமன்றத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. விராட் கோலியிடம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைத் தான் ஐபிஎல் தொடரில் ஆதரிக்கிறேன் என்று கூறினேன். ஏனெனிஎல், இதுவே விராட் கோலியை சந்திக்க எனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு. ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கு எந்த அளவுக்கு அதிகபட்சமாக பாராட்டு தெரிவிக்க முடியுமோ அதை நான் அவருக்கு தெரிவித்தேன். அவரிடம், "நீங்கள் ஆஸ்திரேலியரைப் போல விளையாடுவதால் நீங்கள் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்." என்றேன். ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும்போது மட்டும் இல்லை என்று சொன்னேன்." என்று கூறி இருக்கிறார்.
ஒரு ஆஸ்திரேலிய அமைச்சர் விராட் கோலிக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகராக இருக்கிறேன் என சொல்லி இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.