கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் மூன்று வீரர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கணித்திருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதில் இந்தியாவின் வெற்றிக்கு திலக் வர்மா முக்கிய பங்காற்றினார். தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் அபிஷேக் ஷர்மா, பில் சால்ட் ஆகியோருக்கு பின்னால் 22 வயதான திலக் வர்மா மூன்றாவது இடத்தில் இருக்கின்றார்.

ஏற்கனவே தென்னாப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் தொடர்ந்து இரண்டு சதம் அடித்து திலக் வர்மா அசத்தியுள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவில் செயல்பாடு குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், திலக் வர்மா டி20 கிரிக்கெட் தன்னுடைய திறமையை ஏற்கனவே நிரூபித்து விட்டார்.
அவருடைய ரன்களை எல்லாம் பார்க்கும்போது அபாரமாக இருக்கின்றது. என்னை கேட்டால் திலக் வர்மா மிகச்சிறந்த வீரர் என்ற இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். எனினும் அதற்கு கொஞ்சம் நேரம் இருக்கின்றது. எனினும் திலக் வர்மா தன்னுடைய ஆட்டத்தை தொடர்ந்து ஒரே மாதிரி வெளிப்படுத்த வேண்டும். ஆசிய கோப்பை இறுதி போட்டியில் அவர் விளையாடும் விதத்தைப் பார்த்த பின்பு அவர் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது.
தற்போது அனைவரின் கண்களும் திலக் வர்மா மீது தான் இருக்கும். என்னைக் கேட்டால் டி20 பேட்டிங் வரிசையில் திலக் வர்மா மூன்றாவது இடத்தில் தொடர வேண்டும். நான்காவது இடத்தில் விளையாடினாலும், அது எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆஸ்திரேலிய ஆடுகளம் திலக் வர்மாவின் பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில் தான் இருக்கும் என நம்புகிறேன்.
இந்திய அணியில் மூன்று மேட்ச் மின்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள். அது அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா மற்றும் பும்ரா ஆகியோர்தான். பயமின்றி பேட்டிங் விளையாடுவதில் அபிஷேக் ஷர்மாவை யாரும் தட்டிக் கொள்ள முடியாது. ஆசியக் கோப்பையிலும் பைனலை தவிர இந்தியா அனைத்து போட்டிகளிலும் நல்ல தொடக்கத்தை பெற்றதற்கு அபிஷேக் ஷர்மாவின் அபார ஆட்டம் தான் காரணம்.
முதல் பந்தில் இருந்தே அவர் அடித்து ஆடுகிறார். அபிஷேக் ஷர்மா அபாரமாக விளையாடுவதால் தான் ஜெய்ஸ்வால் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் இடமில்லை. இந்திய டி20 அணியில் ஒரே ஒரு கவலை என்றால் அது சூரியகுமார் யாதவ் பேட்டிங் தான். ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினாலும், சர்வதேச கிரிக்கெட்டில் அவரால் சரியாக விளையாட முடியவில்லை. எனினும் ஆஸ்திரேலிய ஆடுகளம் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில் இருக்கும் என நினைக்கின்றேன். இந்த ஆடுகளங்கள் சூரியகுமார் யாதவின் பார்மை மீட்டுக் கொண்டு வர உதவிகரமாக அமையும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.