ராஜ்காட் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அடைந்த தோல்வியால் வீரர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக இருந்த செய்திக்கு பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி உலகின் நம்பர் ஒன் அணியாக தரவரிசையில் இருந்த போது ஆசிய கோப்பை தொடரில் களம் இறங்கியது. எனினும் இந்தியா, இலங்கை போன்ற அணி எதிராக பாகிஸ்தான் படுதோல்வியை தழுவியது.

இதனால் போட்டி முடிந்தவுடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்த வீரர்களை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கடுமையாக திட்டியதாக செய்திகள் உலா வந்தது. இதனால் கடுப்பான சாகின் அப்ரிடி சிறப்பாக செயல்பட்ட வீரர்களை ஆவது பாராட்டலாமே, எதுக்கு அனைவரையும் திட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டதாகவும் அதற்கு பாபர் அசாம் யார் நன்றாக விளையாடினார்கள், விளையாடவில்லை என்று எனக்கு தெரியும்.
நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம் என பதில் கூறியதாகவும் பின்னர் முகமது ரிஸ்வான் இருவரையும் சமாதானப்படுத்தியதாகவும் செய்திகள் வந்தது. இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா புறப்படுவதற்கு முன் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வீரர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள பாபர் அசாம், இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார். எங்கள் அணியில் எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை. ட்ரெஸ்ஸிங் ரூமில் யாருக்கும் இடையே எந்த சண்டையும் நடைபெறவில்லை. ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் நாங்கள் வெற்றி தோல்வி குறித்து வீரர்கள் மத்தியில் ஆலோசனை நடத்துவோம்.
அப்படி நாங்கள் நடத்தும் போது நாங்கள் பேசியதை சிலர் அப்படியே மாற்றி ட்விஸ்ட் அடித்து விட்டார்கள். எங்கள் அணியில் ஒவ்வொருவரும் அன்பும் மரியாதையுடன் இருக்கின்றோம். இது அணி கிடையாது. ஒரு குடும்பம் போல் தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பாபர் அசாம் கூறினார்.மேலும் இளம் வீரர் நஷிம் சாவை நாங்கள் மிஸ் செய்வோம் . அவருக்கு பதிலாக இந்தியாவில் விளையாடிய அனுபவம் உடைய ஹசன் அலியை நாங்கள் உலககோப்பை அணியில் சேர்த்து இருக்கிறோம் என்று பாபரசன் விளக்கம் அளித்துள்ளார்.