சென்னை : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை புதன்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
இதனால் தொடரை வெல்லும் முனைப்புடன் இரு அணி வீரர்களும் தீவிரமாக விளையாடுவார்கள் என்பதால், சென்னை போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த தொடரில் 300 ரன்களுக்கு மேல் அணியின் ஸ்கோர் அடிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், ஒரு முறை கூட 200 ரன்கள் என்ற இலக்கத்தை கூட தொடவில்லை.
மும்பை ஒருநாள் போட்டியில் 188 ரன்களும், விசாகப்பட்டினத்தில் 117 ரன்களும் அடிக்கப்பட்டது. இதனால் கடைசி ஒருநாள் போட்டிக்கு எவ்வித ஆடுகளம் அமைக்கப்படும் என்று ரசிகர்களின் கவனம் எல்லாம் சென்னை ஆடுகளத்தின் மீதே திரும்பி உள்ளது. இது ஐபிஎல் சீசன் என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சாதகம் அளிக்கும் விதமாக, சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தான் செயல்படும்.
இந்திய அணியும் 3 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற யுத்தியை கையில் எடுத்துள்ளது. இதனால் முதல் சில ஓவர்களிலேயே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக பந்து திரும்ப வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கடைசி ஒருநாள் போட்டியிலும் குறைந்த ஸ்கோரையே எதிர்பார்க்கலாம். இன்னும் சரியாக சொல்லப்போனால் 200 ரன்களிலிருந்து 250 ரன்கள் அடிக்கும் போட்டியாக தான் சேப்பாக்கம் இருக்கும்.

இதே போன்று ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருக்கும் என்பதால் பந்து ரிவர்ஸ் ஆகவும் வாய்ப்புள்ளது. இதனால் மிட்செல் ஸ்டார்க் அபாயகரமான பவுலராக திகழ்வார். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியாவின் கையே ஓங்கி இருக்க வாய்ப்புள்ளது.
2011ஆம் ஆண்டு உலககோப்பைக்கு பிறகு சென்னையில் வெறும் 4 ஒருநாள் போட்டி தான் நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி 2 போட்டியில் வெற்றியும், தோல்வியும் அடைந்திருக்கிறது. கடைசியாக ஆஸ்திரேலியா 2017ஆம் ஆண்டு சென்னையில் விளையாடிய போது குல்தீப், சாஹல் ஜோடி இணைந்து 9 ஓவர் வீசி 5 விக்கெட்டுகளை எடுத்தது.