சிட்னி: ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில், இந்திய அணி தனது கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) இன்று (அக்டோபர் 25, சனிக்கிழமை) எதிர்கொள்கிறது.
இந்தத் தொடரை முழுமையாக இழப்பதைத் (ஒயிட்வாஷ்) தவிர்க்க, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு மிகவும் அவசியமாகிறது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என வென்று சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது. இந்த முக்கியமான போட்டி நடைபெற உள்ள சிட்னி மைதானத்தின் வானிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை குறித்த விரிவான அலசலை இங்கே காணலாம்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியாக, போட்டி நடைபெறும் நாளான சனிக்கிழமையன்று சிட்னியில் வானிலை கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு மழையால் எந்தவிதமான இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், சிட்னியின் அதிகபட்ச வெப்பநிலை 23 முதல் 25 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 முதல் 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வீரர்கள் முழுமையான போட்டியை விளையாட உகந்த சூழல் நிலவும்.
சிட்னி கிரிக்கெட் மைதானம் (SCG) பாரம்பரியமாக பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. பந்து பேட்டிற்கு நன்றாக வரும் என்பதால், பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பிற்குச் சாதகமான சூழலை எதிர்பார்க்கலாம். ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருந்தாலும், ஆட்டத்தின் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களின் புதிய பந்தை சமாளிப்பது பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக இருக்கும். களத்தில் நிலைத்துவிட்டால், பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.
போட்டியின் தொடக்கத்தில், புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு ஸ்விங் கிடைக்கும். ஆடுகளத்தில் இருந்து பந்து நன்றாக எழும்பும் என்பதால், சரியான லெந்த்தில் பந்துவீசுபவர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆஸ்திரேலியாவின் மற்ற மைதானங்களுடன் ஒப்பிடும்போது, சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக ஒத்துழைப்பு அளிக்கும் தன்மையுடையது. ஆட்டம் முன்னேறும்போது, பிட்ச் மெதுவாக மாறி சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக மாறக்கூடும். எனவே, இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி மைதானத்தில் பொதுவாக முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும், முதல் இரண்டு போட்டிகளில் சேஸிங் செய்த ஆஸ்திரேலியா வென்றது. அது டாஸ் வெல்லும் கேப்டன்களை இரண்டாவதாக சேஸ் செய்ய தூண்டலாம். இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் 260 முதல் 280 ரன்கள் என்பது சவாலான ஸ்கோராகக் கருதப்படுகிறது.