மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் பயமின்றி அதிரடியாக விளையாடுகிறார்கள். அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்.

இந்திய அணிக்கு இருக்கும் குறையே பந்துவீச்சு தான். அதற்கு காரணம் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கிறது. மேலும் பந்துவீச்சாளர்கள் போதிய அனுபவம் இல்லாததால் அதிக ரன்களுக்கு செல்கிறார்கள். இதனை மாற்றுவது கடினம். ஆனால் தோனி சொன்னது போல் ஒரு பந்தில் ஆறு ரன் செல்வதற்கு பதில் நான்கு ரன்கள் சென்றாலே அது டி20 யில் பெரிய முன்னேற்றம்தான்.
இதனை நோக்கி பவுலர்கள் சொல்ல வேண்டும் என்று அறிவுரை கூறியிருப்பார். அதனை தான் நமது இந்திய பவுலர்கள் பின்பற்ற வேண்டும். ஒரு ஓவரில் 30 ரன்கள் செல்வதற்கு பதில் 20 ரன்கள் கட்டுப்படுத்தினால் அது மிகப்பெரிய தாக்கத்தை டி20 யில் ஏற்படுத்தும். இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பிளேயிங் லெவனில் ஆவேஷ் கான் அல்லது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வாய்ப்பு இருக்கும் என தெரிகிறது.
ஆனால் வெற்றி பெற்ற அணியை எந்த கேப்டனும் மாற்ற மாட்டார் என்பதால் 99 சதவீதம் அணியில் மாற்றம் இருக்காது. இந்த தருணத்தில் ஆஸ்திரேலிய அணியில் இந்தியாவுக்கு வில்லனாக கருதப்படும் டிராவிஸ் ஹெட் களமிறங்குவார் என தெரிகிறது.
உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு டிராவிஸ் ஹெட் கடந்த இரண்டு ஆட்டமாக ஓய்வில் இருந்த நிலையில் தற்போது அவர் களத்திற்கு திரும்புகிறார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முழு பலத்துடன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறது. ட்ராவிஸ் ஹெட் திரும்புவதால் ஸ்மித் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது.