ஹாபர்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி 186 ரன்களை சேர்த்த நிலையில், இந்திய அணி 18.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. இதன் மூலம் ஹோபர்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி சர்வதேச டி20 போட்டியில் முதல் தோல்வியை தழுவி இருக்கிறது.
இதுவரை இங்கு ஆறு டி20 போட்டிகளில் விளையாடிய நிலையில் இந்த தோல்வி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் என்ற பெருமையை இந்தியா படைத்திருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் டாப் 3 இடமே இந்திய அணி தான். அதிகபட்ச இலக்கை ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிகரமாக துரத்தி இருக்கிறது. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம்.
20 ரன்கள் பேட்டிங்கில் குறைவாக அடித்துவிட்டோம். இதற்கு இந்தியாவுக்கு தான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். இந்திய பவுலர்கள் நல்ல முறையில் இன்று பந்து வீசினார்கள். நாங்கள் பந்து வீசும் போதும் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினோம். ஆனால் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் இந்தியர்களே. எப்போது பேட்டிங் செய்தாலும் கூடுதலாக 20 ரன்கள் அடிக்க வேண்டும்.
அதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் அணியின் பேட்டர்களின் உத்வேகம் இன்று சிறப்பாக இருந்தது. நாங்கள் சில விக்கெட்டுகளை ஆரம்பத்தில் இழந்து விட்டோம். எனினும் டேவிட் களத்திற்கு வந்து அதிரடி காட்டினார் இதேபோன்று மார்க்கஸ் ஸ்டோனிஸ் தன்னுடைய அனுபவத்தை இன்று வெளி காட்டினார்.
டி20 கிரிக்கெட் பொறுத்தவரை ஒரு இரு நல்ல ஓவர்கள் அல்லது ஒரு இரு கெட்ட ஓவர்கள் போட்டியையே மாற்றிவிடும். மேக்ஸ்வெல் பொருத்தவரை அவர் முழு உடல் தகுதியை எட்டும் நிலையில் இருக்கின்றார். ஆனால் இன்னும் அவர் முழுமையாக தயாராகவில்லை. அடுத்த போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது அதற்குள் அவர் முழு உடல் தகுதியை எட்டி விடுவார் என்று நம்புகிறோம். ஏனென்றால் எங்கள் அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த டி20 வீரர் என்றால் அது மேக்ஸ்வெல் தான். அவர் அணிக்கு திரும்புவது எங்களுக்கு எப்போதுமே மகிழ்ச்சியை தரும் என்று மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.