அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கும் நிலையில் இந்திய வீரர்களுக்கு அழுத்தம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பு ஒரு முடிவை எடுத்துள்ளது. மூன்றாவது போட்டி நடக்க உள்ள காபா மைதானத்தில் இந்திய அணி மேற்கொள்ள பயிற்சியின் போது ரசிகர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
அது பற்றிய அறிவிப்பையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு. இது ஒரு வகையில் ரசிகர்களை ஈர்ப்பதற்கான விஷயமாக பார்க்கப்பட்டாலும், மற்றொரு வகையில் இந்திய வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இரண்டாவது போட்டி நடந்த அடிலெய்டு மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்த போது சில ரசிகர்கள் தொடர்ந்து வீரர்களின் பெயர்களை சொல்லி அழைத்ததாகவும், இந்திய வீரர்கள் அவர்களை கண்டு கொள்ளாத நிலையில் மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், மூன்றாவது போட்டி நடக்க உள்ள காபா மைதானத்திலும் ரசிகர்களை அனுமதிக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பு முடிவு செய்து இருக்கிறது. இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்து இருக்கும் நிலையில் காபா மைதானத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்கள், இந்திய வீரர்களின் பயிற்சியின் போது சீண்டும் வேலைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
மேலும், பயிற்சியின் போது ரசிகர்களை அனுமதிப்பது பற்றி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது, "பொதுவாக வலைப் பயிற்சியின் போது ரசிகர்களை அனுமதிப்பதில்லை. நாங்கள் முதன்முறையாக அடிலெய்டில் அப்படி ஒரு விஷயத்தை எதிர்கொண்டோம்." என்றார்,
"வலைப் பயிற்சியின் போது போட்டிக்கான திட்டமிடல்களை மேற்கொள்வோம். நிறைய விஷயங்களை பேசுவோம். அதையெல்லாம் அனைவர் முன்னிலையிலும் பேச முடியாது. எனவே, ரசிகர்களை வலைப் பயிற்சியின் போது அனுமதிப்பது அசௌகரியமான விஷயம்." என்று கூறி இருந்தார். ஆனாலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு ரசிகர்களை அனுமதிப்பதில் உறுதியாக உள்ளது.