பிரிஸ்பேன் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு முதல் நாளில் வெறும் 13.2 ஓவர்களே வீசப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் பிரிஸ்பேன் நகரில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை குறுக்கீடு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. முதல் நாள் டெஸ்ட் போட்டியில் பல ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால் வெறும் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டதால் பார்வையாளர்களின் டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி வழங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்திருக்கிறது.
பார்வையாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு போட்டி நடைபெறாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் இருக்கும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இந்தியாவில் போட்டிக்கான டிக்கெட் பணம் திரும்பி தரப்படாது என்றும், சில ஓவர்கள் வீசப்பட்டு பின்னர் மழையால் போட்டி ரத்தாகி இருந்தால் பணத்தை வாபஸ் தாருங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதை போன்று பிரிஸ்பேனில் மழை கொட்டி தீர்த்த போது மைதானத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி இருந்ததாகவும், ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் துளி கூட மைதானத்தில் மழை நீர் தேங்கவில்லை என்றும் இந்திய பத்திரிகையாளர்கள் பாராட்டுகிறார்கள். பிசிசிஐயிடம் இவ்வளவு பணம் இருந்தும், இது போன்ற ஒரு வசதியை நமது ஊர் மைதானத்தில் ஏற்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் விமர்சித்து இருக்கிறார்கள்.