பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று இருக்கிறது.
இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி பிரிஸ்பென் நகரில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியை ஃபைனலுக்கு செல்லும். தற்போது முதல் இடத்தில் இருந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் தோல்வியை தழுவி இருப்பதால், தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இதனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே பைனலுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசமாக்க முடியும். இந்த நிலையில் இந்த போட்டி சமனில் முடிந்தால் கூட இந்தியாவின் வெற்றி வாய்ப்பு வெகுவாக பாதிக்கும். இதனால் வெற்றியை கண்டிப்பாக பெறவேண்டும் என்பதற்காக ரோஹித் சர்மா, கம்பீர் ஆகியோர் இணைந்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்கள்.
இந்த சூழலில் பிரிஸ்பேன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் ஆடுகளத்தில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கு ஏற்ற திட்டங்களை இந்தியா வகுத்து வருகிறது. இந்த சூழலில் பிரிஸ்பேனில் வரும் சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்களும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி பெரும் அளவு மழையால் பாதிக்கப்படும் என்றும் சில நாட்கள் போட்டியை நடைபெறாத வகையில் அன்றைய நாள் ரத்து செய்யப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி ரசிகர்களுக்கு தான் பெரிய இடியாக வந்த இறங்கி இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டுமென்றால் இந்திய அணி டிரா கூட பெறக் கூடாது. ஒருவேளை மழை குறுக்கிட்டு பின்னர் பேட்டிங் செய்ய வந்தாலும் அது வேகப்பந்துவீச்சாளருக்கு தான் சாதகமாக இருக்கும்.